டெல்லி : மகளிர் பிரிமியர் லீக் இறுதிப்போட்டியில் டெல்லி அணியின் 10 விக்கெட்டுகளை வெறும் 49 ரன்களில் ஆர்சிபி அணி வீழ்த்தியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆர்சிபி அணி களமிறங்கியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 131 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய ஆர்சிபி அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் வெறும் 49 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது அதிர்ச்சி கொடுத்தது.

இதுநாள் வரை ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த அணியாலும் ஆர்சிபி அணி படைத்த சாதனையை முறியடிக்க முடியவில்லை. இதனால் ஆர்சிபி ரசிகர்களை மற்ற அணிகளின் ரசிகர்கள், "49 கேங்" என்று சோசியல் மீடியாவில் கிண்டல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மகளிர் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கி விளையாடி வருகிறது.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் மெக் லானிங் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஷஃபாலி வர்மா - லானிங் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக 64 ரன்களை சேர்த்தது. அப்போது சோஃபி வீசிய ஒரே ஓவரில் ஷஃபார்லி வர்மா 44 ரன்களிலும், ரோட்ரிக்ஸ் மற்றும் கேப்ஸி டக் அவுட்டாகியும் வெளியேறினர்.
இதன்பின் வந்த வீராங்கனைகளில் ராதா யாதவ் 12 ரன்களும், அருந்ததி ரெட்டி 10 ரன்களும் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் டெல்லி அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. சரியாக டெல்லி அணி கடைசி 49 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இது ஆர்சிபி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்சிபி அணி தரப்பில் இளம் வீராங்கனை ஸ்ரேயாங்கா பாட்டில் 3.3 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், சோஃபி மோலினக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஆஷா சோபனா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 114 ரன்கள் மட்டுமே இலக்கு என்பதால் ஆர்சிபி அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மேலும், மகளிர் பிரிமியர் லீக் தொடரில் இதுவரை டெல்லி அணியை ஒருமுறை கூட ஆர்சிபி அணி வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.