வதோதரா: 2025 மகளிர் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் பிரம்மாண்ட சாதனை படைத்தும், ரிச்சா கோஷ் கொடுத்த கேட்சை தவறவிட்டதால் குஜராத் அணி தோல்வி அடைந்தது. ஆஷ்லே கார்ட்னர் படைத்த சாதனை வீணானது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயன்ட்ஸ் அணி அதிரடியாக ஆடியது. அந்த அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் 37 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்தார். அப்போது அவர் எட்டு சிக்ஸ் அடித்து இருந்தார். 3 ஃபோர் மற்றும் 8 சிக்ஸர்கள் அடித்த நிலையில், அவர் மகளிர் ஐபிஎல் தொடரில் ஒரே போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸ் அடித்த வீராங்கனைகளின் பட்டியலில் சோஃபி டெவினுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டார். சோஃபி டெவின் 8 சிக்ஸ் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரம்மாண்ட சிக்ஸர் சாதனையை அடுத்து, குஜராத் ஜெயன்ட்ஸ் 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் செய்தபோது, 14 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
அதன் பின் ராக்வி பிஸ்ட் 25 ரன்களிலும், எல்லீஸ் பெர்ரி 57 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அப்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ரன் ரேட் 9 என்பதாகவே இருந்தது. இந்த நிலையில் ரிச்சா கோஷ் மற்றும் கனிகா அகுஜா இணைந்து அதிரடி ஆட்டம் ஆடினர்.
ரிச்சா கோஷ் ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஒரு கேட்ச் கொடுத்தார். அந்த வாய்ப்பை குஜராத் ஜெயன்ட்ஸ் அணி தவற விட்டது. இதை எடுத்து அதிரடி ஆட்டம் ஆடிய ரிச்சா கோஷ் 27 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார். கனிகா அகுஜா அதிரடியாக ஆடி 13 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஆஷ்லே கார்ட்னர் 8 சிக்ஸ் அடித்து, மகளிர் ஐபிஎல் தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸ் அடித்த வீராங்கனை என்ற சாதனையை சோஃபி டெவினுடன் பகிர்ந்து கொண்டார். ஆனால், அவரது அணி தோல்வி அடைந்ததால், அவரது சாதனை வீணானது. ரிச்சா கோஷின் கேட்சை தவற விட்டது குஜராத் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.