சென்னை : ஐபிஎல் பாணியில் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்காக WPL எனப்படும் மகளிர் பிரீமியர் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்திய வீராங்கனைகள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு வீராங்கனைகளும் அதிக அளவு ஏலம் சென்று தங்களது வாழ்க்கையில் மேன்மை அடைகிறார்கள்.
கிட்டத்தட்ட வெளிநாட்டு லீக் தொடரில் வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு சமமாக வீராங்கனைகளுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் டபுள்யு பி எல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான ஏலம் பெங்களூருவில் நடைபெற்றது.

இதில் தமிழக வீராங்கனை காமிலினி பெயர் வந்ததும் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை வாங்க கடும் போட்டி போட்டது. வெறும் பத்து லட்சம் அடிப்படை விலையாக கொண்டிருந்த காமிலினிக்கு ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் கொடுத்து மும்பை அணி ஏலத்தில் வாங்கி இருக்கிறது. 16 வயது வீராங்கனையான காமிலினி, மதுரை மாநகரத்தை சேர்ந்தவர்.
இதை அடுத்து கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்பதற்காக அவர் சென்னை வந்தார்.சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமியில் சேர்ந்து திறமையை காமிலினி வளர்த்து கொண்டார். இதன் அடுத்து தமக்கு கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக விளையாடி உள்ளூர் போட்டிகளில் அதிரடி பேட்டர் மற்றும் விக்கெட் கீப்பர் என்ற பெயரை காமிலினி பெற்றார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் காமிலினி தந்தை குணாளன் தன்னுடைய மகனுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது 12 வயதான காமிலினி பந்தை எடுத்து அசால்டாக வீசி இருக்கிறார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குணாளன் தன்னுடைய மகளுக்கும் கிரிக்கெட் பயிற்சியை அளிப்பதில் தீவிரம் காட்டியிருக்கிறார்.
இதை அடுத்து காமிலினி, தமிழ்நாடு அண்டர் 19 அணியில் தேர்வு செய்யப்பட்டு அதிலும் அசத்தியிருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற அண்டர் 19 கிரிக்கெட் தொடரில் தமிழக அணிக்காக 8 போட்டிகளில் விளையாடி 311 ரன்களை காமிலினி குவித்திருக்கிறார். இதை அடுத்து அவர் இந்திய அண்டர் 19 அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அப்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் காமிலினி 79 ரன்கள் குவித்து இருக்கிறார்.
இந்த சூழலில் காமிலினி தற்போது அண்டர் 19 ஆசிய கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணியில் தேர்வாகி இருக்கிறார்.இன்று பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 29 பந்துகளில் காமிலினி 44 ரன்கள் குவித்து இருக்கிறார். இதில் நான்கு பௌண்டரிகளும், மூன்று சிக்ஸர்களும் அடங்கும். காலையில் இந்த போட்டி நடக்க மாலையில் காமிலினி மும்பை அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.தமிழக வீராங்கனை ஒருவர் 16 வயதிலே மகளிர் கிரிக்கெட்டில் உச்சம் தொட்டு இருப்பது தமிழக காமிலினி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.