மும்பை: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மெகா ஏலம் வரும் நவம்பர் மாதம் 27ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இந்த மெகா ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சமாக 5 வீராங்கனைகளை தேர்வு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 5 அணிகளும் எந்தெந்த வீராங்கனைகளை தேர்வு செய்கிறோம் என்பதை நேற்று அறிவித்தது. இதில் பல முக்கிய வீராங்கனைகளை அணிகள் விடுவித்திருக்கின்றன. இந்த நிலையில் 5 அணிகளும் தங்களுக்கு ஏற்கனவே விளையாட வீராங்கனைகளில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் அது யாராக இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை அமீலா கெர், பூஜா வஸ்ட்ராகர், யாஷிகா பாட்டியா போன்ற வீராங்கனைகளை விடுவித்து இருக்கிறது. இதில் அமிலா கெர் நல்ல வாய்ப்பாக இருந்தாலும், மும்பை அணி தங்களுடைய பந்துவீச்சை பலப்படுத்த வேண்டி இருக்கிறது.
இதன் காரணமாக இந்தியாவைச் சேர்ந்த பூஜா வஸ்ட்ராகரை மும்பை அணி மீண்டும் ஏலத்தில் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சீசனில் அவர் காயம் காரணமாக விளையாடவில்லை என்றாலும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். டெல்லி அணி மேக் லென்னிங், ஜெஸ் ஜேனேசன், அருந்ததி ரெட்டி உள்ளிட்ட வீராங்கனைகளை விடுவித்து இருக்கிறது.
எனினும் அந்த அணிக்கு சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் தேவை என்பதால் ராதா யாதவை மீண்டும் ஏலத்தில் எடுத்துக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ராதா யாதவுக்கு பேட்டிங்கும் வரும் என்பதால் அணி நிர்வாகம் இந்த முடிவை எடுக்கலாம். இதேபோன்று ஆர்சிபி அணி தங்களுடைய சுழற் பந்துவீச்சை பலப்படுத்துவதற்காக ஆஸ்திரேலிய வீராங்கனை சோபியை தேர்வு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர் சி பி அணி தக்க வைத்த வீராங்கனைகள் அனைவரும் பேட்டர்கள் என்பதால் பந்துவீச்சு படையை பலப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்படலாம். இதேபோன்று up வாரியர்ஸ் அணி ஒரே ஒரு வீராங்கனையான ஸ்வேதா ஷராவத்தை மட்டும் தான் தக்கவைத்தது. இதனால் அந்த அணி பல வீராங்கனைகளை தேர்வு செய்யலாம். இந்த நிலையில் ஏற்கனவே அந்த அணிக்காக விளையாடி அசத்திய இங்கிலாந்து வீராங்கனை சோபி எக்லெஸ்டோனை யூபி வாரியர்ஸ் அணி மீண்டும் ஏலத்தில் எடுக்கும்.
மகளிர் பிரீமியர் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் அவர் உள்ளார். தற்போது டி20 தரவரிசை பவுலர்களுக்கான பட்டியலில் அவர் நான்காவது இடத்தில் இருப்பதால் அவரை முதல் ஆளாக யுபி வாரியர்ஸ் அணி எடுக்கலாம். இதுபோன்று குஜராத் ஜெயின்ஸ் அணி எந்த ஒரு இந்திய வீராங்கனைகளையும் தக்க வைத்துக் கொள்ளவில்லை. இதனால் பேட்டரான இந்தியாவைச் சேர்ந்த ஹர்லின் டியோலை குஜராத் அணி மீண்டும் ஏலத்தில் எடுக்க முயற்சி செய்யும். குஜராத் அணியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீராங்கனை, மூன்றாவது அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை போன்ற பெருமையை அவர் படைத்திருக்கிறார்.