வதோதரா: 2026 மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. கடைசி ஓவர் வரை சென்ற இந்தப் போட்டியில், ஸ்மிருதி மந்தனா ஆட்டமிழந்த பிறகு டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தது. ஆனால், அந்த இக்கட்டான சூழலை ராதா யாதவ் தனது சாதுரியமான ஆட்டத்தால் மாற்றி ஆர்சிபி அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார்.
வதோதராவில் உள்ள பிசிஏ மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஷஃபாலி வர்மா (20), லிசெல்லி லீ (37) ஆகியோர் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். பின்னர் வந்த கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பொறுப்புடன் விளையாடி 37 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார்.
கடைசி கட்டத்தில் லாரா வோல்வார்ட் மற்றும் சினெல் ஹென்றி ஆகியோர் பெங்களூரு பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். லாரா 44 ரன்களும், ஹென்றி 15 பந்துகளில் 35 ரன்களும் விளாச, டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இறுதிப்போட்டி என்பதால் இந்த ஸ்கோர் பெங்களூரு அணிக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
204 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கித் துரத்திய பெங்களூரு அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. கிரேஸ் ஹாரிஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், அதன்பிறகு இணைந்த கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஜார்ஜியா வோல் ஜோடி டெல்லி பந்துவீச்சாளர்களைத் திணறடித்தது.
ஸ்மிருதி மந்தனா 41 பந்துகளில் 87 ரன்களும், ஜார்ஜியா வோல் 54 பந்துகளில் 79 ரன்களும் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தனர்.
பெங்களூரு அணி எளிதாக வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 17வது ஓவரில் ஜார்ஜியா ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரிச்சா கோஷ் 6 ரன்களில் வெளியேறினார். ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனையாக 19வது ஓவரின் 4வது பந்தில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆட்டமிழந்தார். அப்போது பெங்களூரு அணி வெற்றிபெற 8 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டன.
ஸ்மிருதி ஆட்டமிழந்ததும் மைதானத்தில் நிசப்தம் நிலவியது. டெல்லி அணி மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தது போன்ற சூழல் உருவானது. புதிய பேட்டர்களால் இந்த அழுத்தத்தைக் கையாள முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால், அப்போது களமிறங்கிய ராதா யாதவ் எந்தப் பதற்றமும் இல்லாமல் மிகச் சாதுரியமாகச் செயல்பட்டார். அவர் எதிர்கொண்ட 5 பந்துகளில் 2 பவுண்டரிகள் உட்பட 12 ரன்கள் விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் 19.4 ஓவர்களில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர்ந்து நான்காவது முறையாக இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது. பெங்களூரு அணிக்கு இது இரண்டாவது சாம்பியன் பட்டமாகும். அழுத்தமான நேரத்தில் நிதானமாக விளையாடி வெற்றியைத் தேடித்தந்த ராதா யாதவ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
"வங்கதேசத்தை விரட்டுனது பாவம்.." கொந்தளித்த பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா.. மீண்டும் சர்ச்சை