நவி மும்பை: 2026 மகளிர் ஐபிஎல் (WPL) தொடரின் முதல் போட்டியிலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி புதிய வரலாறு படைத்துள்ளது. தோல்வியின் விளிம்பில் இருந்த போட்டியைத் தலைகீழாக மாற்றி, நடப்புச் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இமாலயச் சாதனை படைத்துள்ளது.
வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்த 155 ரன்கள் என்ற இலக்கை ஆர்சிபி துரத்தியது. ஒரு கட்டத்தில் ஆர்சிபி அணி 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துத் தடுமாறிக் கொண்டிருந்தது.

கடைசி 10 ஓவர்களில் வெற்றிக்கு 90 ரன்கள் தேவைப்பட்டது. கையில் இருப்பது வெறும் 5 விக்கெட்டுகள் மட்டுமே. மகளிர் ஐபிஎல் வரலாற்றில், கடைசி 10 ஓவர்களில் இவ்வளவு குறைவான விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு 90 ரன்களை எந்த அணியும் வெற்றிகரமாகத் துரத்தியதில்லை.
இதற்கு முன்பு, 2023-ல் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக உ.பி. வாரியர்ஸ் அணி கடைசி 10 ஓவர்களில் 82 ரன்களைத் துரத்தியதே சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை ஆர்சிபி முறியடித்துப் புதிய வரலாறு படைத்துள்ளது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. WPL வரலாற்றில் கடைசி ஓவரில் வெற்றிகரமாகத் துரத்தப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ரன்கள் இதுவாகும். இதைச் சாத்தியமாக்கியவர் தென்னாப்பிரிக்க வீராங்கனை நாடின் டி கிளர்க். 44 பந்துகளில் 63 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை கரைசேர்த்தார்.
முதலில் ஆடிய மும்பை அணி தடுமாறியது. ஆர்சிபி பந்துவீச்சாளர் லாரன் பெல் வீசிய 19 பந்துகளில் ரன் ஏதும் எடுக்க முடியவில்லை. இருப்பினும் சஜீவன் சஜனா (45 ரன்கள்) மற்றும் நிக்கோலா கேரி ஆகியோரின் உதவியால் மும்பை 154 ரன்களை எட்டியது. நாடின் டி கிளர்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்கு ஆடிய ஆர்சிபி அணியில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, கிரேஸ் ஹாரிஸ், ரிச்சா கோஷ் என முன்னணி வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினர். 75 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் போய்விட்டன.
அருந்ததி ரெட்டியுடன் ஜோடி சேர்ந்த நாடின் டி கிளர்க், யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடி காட்டி அணியை வரலாற்று வெற்றிக்குப் அழைத்துச் சென்றார். இந்த வெற்றியின் மூலம், "எங்களால் எதுவும் முடியும்" என்று முதல் போட்டியிலேயே ஆர்சிபி அணி நிரூபித்துள்ளது.