மும்பை: மகளிர் பிரீமியர் லீக் (WPL) நான்காவது சீசனின் தொடக்க ஆட்டத்தில், லாரன் பெல்லின் சிறப்பான பந்துவீச்சையும் மீறி நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக சவாலான ஸ்கோரை பதிவு செய்தது.
நவி மும்பையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை லாரன் பெல், தனது பந்துவீச்சில் 19 டாட் பால்கள் வீசி, ஒரு WPL இன்னிங்ஸில் இரண்டாவது அதிக டாட் பால் சாதனையை சமன் செய்தார். 2025ல் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸின் ஷப்னம் இஸ்மாயில் வீசிய 20 டாட் பால்கள் முதலிடத்தில் உள்ளன.

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் நாடின் டி க்ளெர்க் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். லாரன் பெல், தொடக்க ஆட்டக்காரரான அமெலியா கெர்ரை (4) அவுட்டாக்கினார். டி க்ளெர்க் (4/26) அடுத்ததாக, நாட் சிவர்-ப்ரன்ட் (4) மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (20) ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, 11 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸை 67/4 என சரித்தார்.
இருப்பினும், ஆஸ்திரேலிய வீராங்கனை நிக்கோலா கேரி 29 பந்துகளில் 40 ரன்கள்)மற்றும் சஜீவன் சஜனா 25 பந்துகளில் 45 ரன்கள் ஐந்தாவது விக்கெட்டுக்கு முக்கியமான 82 ரன்கள் குவித்து மும்பைக்கு வலு சேர்த்தனர். ஏழு பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் சஜனா ஆடினார். தமிழகத்தை சேர்ந்த தொடக்க வீராங்கனை குணாளன் கமாலினி 28 பந்துகளில் 32 ரன்கள் மும்பையின் ஸ்கோரில் முக்கிய பங்களிப்பு செய்தார்.
முன்னதாக, ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா டாஸ் வென்று பனிப்பொழிவு கருதி முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஆர்சிபி அணிக்காக அறிமுகமான லாரன் பெல் போட்டிக்கு "இது நிச்சயமாக வேறுபட்ட அனுபவம். வேறு ஒரு அணி, ஆர்சிபி ஒரு பெரிய ப்ராஞ்சைஸ். நான் வந்ததிலிருந்து சில நாட்கள் பரபரப்பாக இருந்தன, ஆனால் நான் உற்சாகமாக இருக்கிறேன்."
"பணிகள் நிற்காமல் நடந்தன. இது ஒரு பெரிய ப்ராஞ்சைஸ் என்பதால் பணிகள் அதிகம் இருந்தன. அனைவரையும் சந்தித்து, பெயர்களை அறிந்து, கற்றுக்கொள்வது மகிழ்ச்சியாக இருந்தது. இன்றிரவுக்கான முதல் ஆட்டத்திற்காக நான் உற்சாகமாக இருக்கிறேன். என்னை விரும்பும் ஒரு அற்புதமான அணியாகும் இது," என்று அவர் தெரிவித்தார்.