மும்பை: WPL எனப்படும் மகளிர் பிரிமியர் லீக் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி ஆர் சி பி அணியிடம் தோல்வியை தழுவியது. நவி மும்பையில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியில் தொடக்க வீராங்கனையாக விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த குணாளன் காமினி 32 ரன்கள் எடுக்க நடு வரிசையில் நிக்கோலா கேரி 29 பந்துகளில் 40 ரன்களும், சஜீவன் சஞ்சனா 25 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தனர்.

இதன் காரணமாக மும்பை மகளிர் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களம் இறங்கியது. தொடக்க வீராங்கனை கிரேஸ் ஹாரிஸ் 25 ரன்கள், ஸ்மிருதி மந்தனா 18 ரன்களும் எடுக்க நடுவரிசை வீராங்கனைகள் தயாளன் ஹேமலதா, ரிச்சா கோஸ் மற்றும் ராதா யாதவ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
ஒரு கட்டத்தில் 65 ரன்களில் 5 விக்கெட் இழந்து ஆர்சிபி அணி தடுமாறியது. எனினும் நடுவரிசையில் விளையாடிய நதைன் கிளார்க் அதிரடியாக விளையாடி 63 ரன்கள் சேர்த்தார். அருந்ததீ ரெட்டி 20 ரன்கள் எடுத்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு ஆர்சிபி அணிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. முதல் இரண்டு பந்துகள் டாட் பால் ஆக மாற மூன்றாவது பந்தில் சிக்ஸர், நான்காவது பந்தில் பவுண்டரி என டி கிளர்க் பட்டையை கிளப்பினார்.
இதனால் கடைசி இரண்டு பந்துக்கு 8 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அப்போது ஐந்தாவது பந்தில் டி கிளர்க் சிக்ஸர் அடித்தார். இதனால் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. அப்போது டி கிளர்க், ஒரு பவுண்டரி அடித்து ஆர்சிபி அணிக்கு திரில் வெற்றியை பெற்று தந்தார்.