மும்பை: WPL எனப்படும் மகளிர் பிரீமியர் லீக் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடக்கவுள்ளது. இந்திய மகளிர் அணி ஐசிசி உலகக் கோப்பையை வென்றதால், ரசிகர்களிடையே மகளிர் கிரிக்கெட் மீதான ஆர்வம் உச்சத்தில் உள்ளது. இதனால் WPL தொடருக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், மெகா ஏலம் நவம்பர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஏலத்துக்கு முன்பாக, ஐந்து அணிகளும் எந்த வீராங்கனைகளைத் தக்கவைக்கப் போகிறோம், யாரை விடுவிக்கப் போகிறோம் என்பதை அறிவித்துள்ளன. ஒவ்வொரு அணிக்கும் 15 கோடி ரூபாய் பர்ஸ் ஒதுக்கீடு உள்ளது.

அதிகபட்சம் 5 வீராங்கனைகளைத் தக்கவைக்கலாம். இதில் 3 இந்திய வீராங்கனைகளும், 2 வெளிநாட்டு வீராங்கனைகளும் இருக்க வேண்டும். இதன்படி, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகியவை 5 வீராங்கனைகளையும், ஆர்சிபி 4 பேரையும், குஜராத் ஜயண்ட்ஸ் 2 பேரையும், யுபி வாரியர்ஸ் ஒரு வீராங்கனையையும் தக்கவைத்துள்ளன.அணி வாரியாக தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள் மற்றும் மீதமுள்ள தொகை பற்றி தற்போது பார்க்கலாம்.
நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரை 2.5 கோடி ரூபாய்க்கும், நாட் சிவர் பிரண்டை 3.3 கோடி ரூபாய்க்கும், ஹெய்லி மேத்யூஸை 1.75 கோடி ரூபாய்க்கும், அமன்ஜோத் கவுரை ஒரு கோடி ரூபாய்க்கும், தமிழக வீராங்கனை எஸ். காமினியை 50 லட்சம் ரூபாய்க்கும் தக்கவைத்துள்ளது. இதனால் அவர்களிடம் 5.75 கோடி ரூபாய் மீதமாக உள்ளது.
இதில் உலககோப்பை வென்ற இந்திய கேப்டனுக்கு வெளிநாட்டு வீராங்கனை விட குறைவான தொகையை தந்திருப்பது, ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது இந்திய மகளிர் கேப்டனை அவமானப்படுத்திய செயல் என்று ரசிகர்கள் குறை கூறியுள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஸ்மிருதி மந்தனாவை 3.5 கோடி ரூபாய்க்கும், ரிச்சா கோஷை 2.75 கோடி ரூபாய்க்கும், ஷ்ரேயங்கா பாட்டீலை 60 லட்சம் ரூபாய்க்கும், எலிஸ் பெர்ரியை 2 கோடி ரூபாய்க்கும் தக்கவைத்து, கைவசம் 6.15 கோடி ரூபாயை வைத்திருக்கிறது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசான் கேப், அன்னபெல் சதர்லேண்ட் ஆகியோரை தலா 2.2 கோடி ரூபாய்க்கும், இந்திய அணியில் இடம்பெறாத நிக்கி பிரசாதை 50 லட்சம் ரூபாய்க்கும் தக்கவைத்து, மீதி 5.75 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது.
குஜராத் ஜயண்ட்ஸ் அணி ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லீ கார்ட்னரை 3.5 கோடி ரூபாய்க்கும், பெத் மூனியை 2.5 கோடி ரூபாய்க்கும் தக்கவைத்து, அதிகபட்சமாக 9 கோடி ரூபாயை மீதமாக வைத்திருக்கிறது.
யுபி வாரியர்ஸ் அணி இந்திய அணியில் இடம்பெறாத ஸ்வேதா சரவதை மட்டும் 50 லட்சம் ரூபாய்க்கு தக்கவைத்து, மிக அதிகமாக 14.5 கோடி ரூபாயை ஏலத்திற்காகக் கையிருப்பில் வைத்துள்ளது. அணிகள் 5 வீராங்கனைகளை முழுமையாகத் தக்கவைக்க RTM (ரைட் டு மேட்ச்) கார்டைப் பயன்படுத்தலாம். மெகா ஏலம் டெல்லியில் நவம்பர் 27 அன்று நடக்கிறது.