
ஐபிஎல் ஏலம் விவரம்
இந்த ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 4ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்காக டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உத்தரபிரதேச வாரியர்ஸ் என மொத்தம் 5 அணிகள் களமிறங்குகின்றன. இந்த 5 அணிகளுக்குமான வீராங்கனைகள் ஏலம் தான் இன்று மதியம் 2.30 மணியளவில் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவுள்ளது.

விதிமுறைகள் என்ன?
ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 15 - 18 வீராங்கனைகளை தேர்வு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 90 வீராங்கனைகள் இந்த ஏலத்தில் வாங்கப்படவுள்ளனர். இதற்காக உலகம் முழுவதும் இருந்து 1,525 வீராங்கனைகள் பதிவுசெய்த நிலையில் 246 இந்தியர்கள், 163 வெளிநாட்டினர் என 409 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அணியும் ரூ.12 கோடி வரை செலவு செய்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் ஏலம்
இந்த ஏலத்தில் ஹர்மன் ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஹெய்லே மேத்யூவ்ஸ், கார்ட்னர் உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகள் அதிகபட்சமாக ரூ.50 லட்சம் என்ற அடிப்படை தொகையுடன் களமிறங்குகின்றனர். இவர்கள் ரூ.2 கோடி வரை ஏலம் கேட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்திய அணி ஸ்மிருதி மந்தனாவுக்கு அதிக மவுசு உள்ளது.

உலகளவில் ஆர்வம்
இந்த ஏலத்தில் பங்கேற்றுள்ள 409 வீராங்கனைகளில் 28 பேர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் ஆகும், இங்கிலாந்தில் இருந்து 27 வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் (23 ), நியூசிலாந்து (19), தென்னாப்பிரிக்கா (17), இலங்கை (15), ஜிம்பாப்வே (11), வங்கதேசம் (9), அயர்லாந்து (6), அமீரகம் (4), ஹாங்காங், அமெரிக்கா,நெதர்லாந்து, தாய்லாந்து நாடுகளில் இருந்து தலா ஒரு வீராங்கனைகளும் தேர்வாகியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











