டெல்லி: 2026 மகளிர் ஐபிஎல் (WPL) தொடருக்கான மெகா ஏலம் புதுடெல்லியில் நடைபெற்றது. முதல் சுற்றான 'மார்க்கீ' ('Marquee') செட்டிலேயே வீராங்கனைகள் கோடிகளில் ஏலம் போனது அனைவரையும் வியக்க வைத்தது. குறிப்பாக இந்திய வீராங்கனை தீப்தி சர்மா மற்றும் நியூசிலாந்தின் அமீலியா கெர் ஆகியோர் ₹3 கோடி ரூபாய் மைல்கல்லைத் தாண்டி சாதனை படைத்துள்ளனர்.
அதேவேளையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் நட்சத்திர வீராங்கனையுமான அலிசா ஹீலியை முதல் சுற்றில் எந்த அணியும் வாங்கவில்லை. இது அதிர்ச்சி அளித்தது.

மார்க்கீ செட்டில் அதிகபட்ச விலைக்கு ஏலம் போனவர் இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா. இவரது அடிப்படை விலை ₹50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இவரை எடுக்க ஆர்வம் காட்டியது. ஆனால், ஏற்கனவே இவரை அணியில் வைத்திருந்த யூபி வாரியர்ஸ் அணி, அவரை விடாமல் துரத்தியது.
டெல்லி அணி விலையை ஏற்ற ஏற்ற, யூபி வாரியர்ஸ் தனது 'RTM' ('Right to Match') கார்டைப் பயன்படுத்தி விலையைச் சமன் செய்துகொண்டே இருந்தது. இறுதியில் ₹3.2 கோடிக்கு தீப்தி சர்மாவை யூபி வாரியர்ஸ் அணி தக்கவைத்துக்கொண்டது.
மகளிர் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச விலைக்கு ஏலம் போனவர் என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா (₹3.4 கோடி) தக்கவைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஆஷ்லே கார்ட்னர் மற்றும் நேட் ஸ்கிவர்-பிரண்ட் ஆகியோர் ₹3.2 கோடிக்கு ஏலம் போயிருந்தனர். தற்போது தீப்தி சர்மாவும் ₹3.2 கோடிக்கு ஏலம் போய், மகளிர் ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச விலையைப் பெற்ற வீராங்கனை என்ற பெருமையைப் பெறுகிறார். 2026 மகளிர் ஐபிஎல் ஏலத்துக்கு முன் ஸ்மிருதி மந்தனா, ஆஷ்லே கார்ட்னர் மற்றும் நேட் ஸ்கிவர்-பிரண்ட் ஆகியோர் 3.5 கோடிக்கு தக்கவைக்கப்பட்டு உள்ளனர்.
நியூசிலாந்து அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் அமீலியா கெர் மீதும் அணிகள் பணமழை பொழிந்தன. மும்பை இந்தியன்ஸ் மற்றும் யூபி வாரியர்ஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் ₹3 கோடி கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி அவரை மீண்டும் வாங்கியது.
இந்த ஏலத்தின் மிகப்பெரிய அதிர்ச்சியாக, ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும், அதிரடி தொடக்க வீராங்கனையுமான அலிசா ஹீலி எந்த அணியாலும் வாங்கப்படாமல் அன்சோல்ட் ஆனார். அவரது அடிப்படை விலையான ₹50 லட்சத்திற்குக்கூட அவரை வாங்க யாரும் முன்வராதது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.