டெல்லி: மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மெகா ஏலம் தற்போது விறுவிறுப்பாக தொடங்கி இருக்கிறது. டெல்லியில் தொடங்கியுள்ள இந்த ஏலத்தில் மொத்தமாக 227 வீராங்கனைகள் போட்டி போட உள்ளனர். ஆனால் மொத்தமாக ஐந்து அணிகளும் இணைந்து வெறும் 73 இடங்களுக்கான வீராங்கனைகளை மட்டுமே தேர்வு செய்ய உள்ளது.
இதில் 23 வீராங்கனைகள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இந்த நிலையில் மார்க்யூ பட்டியல் என அதிக அடிப்படை விலையை வைத்திருக்கும் வீராங்கனைகள் பட்டியல் முதலில் ஏலத்திற்கு வந்தது.

இதில் முதல் வீராங்கனையாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலிசா ஹெலி வந்து இருந்தார். ஹெலியை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. இதனால் அவர் விலை போகவில்லை. இதை அடுத்து இரண்டாவது வீராங்கனையாக நியூஸ்லாந்தைச் சேர்ந்த சோபி டிவைன் வந்தார். கடந்த சீசனில் சோபி டிவைன் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் விளையாடவில்லை.
அவருக்கு அடிப்படை விலையாக 50 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. இதை அடுத்து குஜராத் அணி அவரை 50 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் கேட்டது. இதன் அடுத்து ஆர்சிபி அணி உள்ளே வந்து அவருடைய விலையை உயர்த்தியது. இதன் பிறகு இரு அணிகளும் கடுமையாக மோதியதால் அவருடைய விலை ஒரு கோடி ரூபாய் வரை உயர்ந்தது.
இரு அணிகளும் கடுமையாக போட்டி போட்ட நிலையில் டெல்லி அணி சோபி டிவைனை வாங்க முயற்சி செய்தது. ஆனால் குஜராத் அணி விடாமல் தொடர்ந்து விலை கேட்டு வந்தது. அதிகபட்ச விலையாக இரண்டு கோடி ரூபாய் வரை குஜராத் ஜெயின்ஸ் அணி கேட்க மற்ற அணிகள் விலகிக் கொண்டன.
இதன் அடுத்து சோபி டிவைன் குஜராத் அணிக்காக விளையாட உள்ளார். மகளிர் பிரீமியர் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய சோபி, இதுவரை 18 போட்டியில் விளையாடி 402 ரன்களை குவித்திருக்கிறார். பந்துவீச்சில் மொத்தம் ஒன்பது விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார். தற்போது அவர் ஆர்சிபி அணியில் இருந்து சென்று குஜராத் அணிக்கு விலை போய்விட்டார்.