டெல்லி: மகளிர் உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவுக்கு பயம் காட்டிய தென்னாப்பிரிக்கா வீராங்கனை லாரா வோல்வார்ட்டை வாங்க ஆர்சிபி, டெல்லி அணியும் கடுமையாக போட்டி போட்டு கொண்டது. 2025 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற பெயரை லாரா வோல்வார்ட் பெற்றார்.
9 போட்டிகளில் மொத்தமாக அவர் 571 ரன்கள் குவித்து இருந்தார். இதில் இரண்டு சதம் அடங்கும். அரை இறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 169 ரன்களை விளாசிய அவர் இறுதிப் போட்டியில் 101 ரன்களை குவித்து கடைசிவரை இந்தியாவுக்கு பயம் காட்டி வந்தார். லாரா ஆட்டமிழந்த பிறகு தான் இந்தியாவுக்கு கோப்பையே கிடைத்தது.

இதனால் இந்தியர்கள் பலரும் லாராவின் ரசிகர்களாக மாறிவிட்டனர். கோப்பையை இந்தியா வென்ற போது கூட "Well played Laura லாரா" என்று மும்பை ரசிகர்கள் குரல் கொடுத்த சம்பவமும் அரங்கேறியது. தற்போது அவர் நல்ல பார்மில் இருக்கின்றார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிர் பிக் பாஸ் லீக் தொடரில் கூட ஆறு போட்டிகளில் 193 ரன்கள் அடித்து 48 என்ற அளவில் சராசரியை வைத்து இருக்கிறார்.
இப்படி பிரமாதமாக விளையாடக்கூடிய லாராவின் பெயர் வந்தவுடன் அவர் எந்த அணிக்கு செல்ல போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. இந்த நிலையில் அவருடைய அடிப்படை விலை வெறும் 30 லட்சம் ரூபாயாக தான் இருந்தது. இதை அடுத்து ஆர்சிபி அணியும் டெல்லி அணியும் அவருக்கு கடுமையாக போட்டி போட்டது. இதனால் அவருடைய விலை கிட்டத்தட்ட 85 லட்சம் வரை உயர்ந்தது.
ஒரு கட்டத்தில் டெல்லி அணி போட்டியிலிருந்து விலக ஆர் சி பி அணி அவரை வாங்கலாம் என்ற மகிழ்ச்சியில் இருந்த போது திடீரென்று டெல்லி அணி ரீஎன்ட்ரி கொடுத்து ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கொடுத்து அவரை வாங்கியது. இதனால் ஆர் சி பி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஸ்மிருதி மந்தானாவும் லாராவும் தொடக்க வீராங்கனையாக களமிறங்கினால் பட்டாசாக இருக்குமே என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அந்த கனவை கடைசி நிமிடத்தில் டெல்லி அணி கலைத்தது.