மும்பை:உலகக் கோப்பைப் போட்டி தோல்வியைத் தொடர்ந்து இரண்டு அணிகளை உருவாக்கி இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
1979ம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை இல்லாத கேவலமாக உலகக் கோப்பைப் போட்டியின் 2வது சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் அவமானத்துடன் ஊர் திரும்புகிறது இந்திய அணி.
இந்திய அணியின் இந்த தோல்வி ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, கிரிக்கெட் வாரியத்துக்கும் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் கொடுத்துள்ளது.
இதையடுத்து தொங்கிப் போயுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் பெருமையை தூக்கி நிறுத்தும் வகையில் பல அதிரடி நடவடிக்கைகளுக்கு கிரிக்கெட் வாரியம் தயாராகி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்திய அணியை இரண்டாகப் பிரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தியா சீனியர், இந்தியா ப்ளூ என இரு அணிகளை உருவாக்க கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
மொத்தம் 25 வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறப்பான பயிற்சி கொடுத்து, சர்வதேச ேபாட்டிகளில் அவர்களை பங்கெடுக்க வைத்து அடுத்த உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக அவர்களை பக்காவாக தயார்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இரு அணிகளையும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளச் செய்து அவர்களை உலகத் தரம் மிக்க வீரர்களாக மாற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் வயதான வீரர்களைக் குறைத்து விட்டு இளம் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோல இளம் கேப்டனை நியமிக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவை தவிர மேலும் பல நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அவசரக் கூட்டம் ஏப்ரல் 6ம் தேதி மும்பையில் கூட்டப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு முன்னாள் கேப்டன்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கபில்தேவ், கவாஸ்கர் உள்ளிட்டோரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிகிறது.
இந்தக் கூட்டத்தில் இன்னொரு முக்கிய அம்சமும் தீவிரமாக விவாதிக்கப்படவுள்ளது. அதாவது, இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் (பிட்ச்) சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாகனவை. ஆனால் வெளிநாடுகளில் உள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்றவை.
இதனால்தான் இந்தியாவில் மட்டும் சிறப்பாக ஆடும் இந்திய அணி, வெளிநாடுகளில் மண்ணைக் கவ்வி வருகிறது. எனவே இந்தியாவிலும் வேகப்பந்துவீச்சுக்கேற்ப பிட்சுகளை மாற்றி அமைப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
மீண்டும் ஜான் ரைட்?
இதற்கிடையே, இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான, நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் ரைட்டை மீண்டும் பயிற்சியாளராக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ரைட்டுடன், இந்திய கிரிக்கெட் வாரியம் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2003ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின்போது ரைட்தான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார். அப்போட்டியில் இறுதி ஆட்டம் வரை இந்தியா முன்னேறியது. ரைட் காலத்தில்தான் இந்திய அணியில் இளம் வீரர்கள் அதிக அளவில் சேர்க்கப்பட்டனர்.
எனவே மீண்டும் ரைட்டைக் கொண்டு வர இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புவதாக தெரிகிறது.