டெல்லி: டோணி தலைமையிலான புனே அணிக்கு சோதனை மேல் சோதனை. கெவின் பீட்டர்சன், டூபிளஸிஸ்ஸைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் காயம் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேறியுள்ளார்.
டோணி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி இதுவரை 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. திறம்பட விளையாடினாலும் வெற்றி பெற முடியாமல் திணறி வருகிறது.
இந்த நிலையில் அடுத்தடுத்து வீரர்கள் காயம் காரணமாக வெளியேறி வருகிறார்கள். முதலில் காலில் காயம் ஏற்பட்டு கெவின் பீட்டர்சன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேறினார். இதையடுத்து அணியின் பலமான பேட்ஸ்மேன்களில் ஒருவரான டூபிளஸிஸ்ஸுக்கு விரலில் காயம் ஏற்பட்டு அவரும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 101 ரன்கள் எடுத்து அசத்தி ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்த ஸ்டீவ் ஸ்மித்துக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேறியுள்ளார்.
ஏற்கனவே திண்டாடி வரும் புனே அணி இப்படி அடுத்தடுத்து 3 முக்கிய வீரர்களை இழந்துள்ளதால் அந்த அணி இறுதிப் போட்டி வரை தேறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.