மும்பை: விராட் கோலி,ரோஹித் சர்மா ஆகியோர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் இந்திய அணி தற்போது புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளது. இந்த சூழலில் இதுவரை இந்திய அணி இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வரை தகுதி பெற்று ரன்னர் அப்பட்டத்தை மட்டுமே பெற்று இருக்கிறது.
மூன்றாவது முறையாக தகுதி பெறும் வாய்ப்பை இந்திய அணி களமிறங்கிய சூழலில் தான் கோலி, ரோஹித் ஆகியோர் ஓய்வு பெற்று இருக்கின்றனர். இந்த தருணத்தில் புதிய ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கில் வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது.

இதில் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.இந்த தொடரில் இந்திய அணி குறைந்தபட்சம் இரண்டு டெஸ்ட் போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும். இரண்டு போட்டிகள் டிரா பெற வேண்டும்.
இதனை அடுத்து இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணியை இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் பிறகு டிசம்பர் மாதம், தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அவர்களுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இந்தியா விளையாட உள்ளது.
2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியா இலங்கை நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
அந்தத் தொடர் முடிவடைந்த உடன் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் டிசம்பர் ஜனவரி மாதம் விளையாடுகிறது.
அதனைத் தொடர்ந்து 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து பயணம் இந்தியாவுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தலாம். மற்ற தொடர்களில் எல்லாம் இந்தியா அனைத்து போட்டிகளில் வென்றால் நிச்சயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.