லண்டன்: 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி மிகவும் பின்தங்கி உள்ளது. இன்று இரண்டு அணிகள் வெவ்வேறு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. அதனால் அந்த இரண்டு அணிகளும் புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளன. அதே சமயம் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
2025-27 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த வாரம் முதல் துவங்கியது. இதில் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர், இலங்கை - வங்கதேச டெஸ்ட் தொடர் மற்றும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆகியவை ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன.

ஆஸ்திரேலியா அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி வெற்றி பெற்றதை அடுத்து, அந்த அணி புள்ளிப்பட்டியலில் 100 சதவீத வெற்றியுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி இந்திய அணியை முதல் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியதை அடுத்து, அந்த அணியும் 100 சதவீத வெற்றியுடன் ஆஸ்திரேலியாவுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளது.
இதில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதிய முதல் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்றது. இதை அடுத்து, இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இடம் பிடித்திருக்கிறது. அந்த அணி இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் ஒரு டிராவுடன் 66.67 சதவீத வெற்றி சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இலங்கை அணி மூன்றாவது இடத்தில் இருக்கும் நிலையில், வங்கதேச அணி நான்காவது இடத்தில் உள்ளது. அந்த அணி இரண்டு போட்டிகளில் ஒரு தோல்வி மற்றும் ஒரு டிராவுடன் 16.67 சதவீத என்ற வெற்றி சதவீதத்துடன் உள்ளது. வங்கதேசம் பெற்ற ஒரு டிரா மூலம் அந்த அணிக்கு இந்த வெற்றி சதவீதம் கிடைத்திருக்கிறது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தாங்கள் விளையாடிய ஒரு டெஸ்ட் போட்டியில் தோல்விகளை அடைந்ததை அடுத்து ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் வென்றால் கூட இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் அடுத்த சில மாதங்களுக்கு முதல் இடத்தைப் பிடிக்க முடியாது. ஏனெனில், ஆஸ்திரேலியா அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் எளிதாக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அதனால், அந்த அணி 100 சதவீத வெற்றியுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும்.
எனவே, இந்திய அணி இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற வேண்டுமெனில், அதை இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்தே செய்ய வேண்டும். இங்கிலாந்து தொடரில் மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெறுவது குறித்து இந்திய அணி தீவிரமாக ஆலோசிக்க வேண்டும்.
ஏனெனில், கடந்த முறை 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடிய போது, போதிய வெற்றிகளைப் பெற முடியாமல் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்திருந்தது.
அதுபோல மீண்டும் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால், இப்போதிலிருந்தே ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுவது குறித்து இந்திய அணி தீவிரமாக யோசிக்க வேண்டும். அப்போது தான் நவம்பர் இறுதியில் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரில் சில தோல்விகளை சந்தித்தால் அந்த நேரத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை முந்தி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பெற முடியும்.