கேப்டவுன்: பொதுவாக இட ஒதுக்கீடு என்ற முறை நமது நாட்டில் பல்வேறு துறைகளில் இருக்கின்றது. இதன் மூலம் அடித்தட்டில் இருக்கும் மக்கள் வாய்ப்பை பெற்று வாழ்க்கையில் முன்னேறுவதற்காக வழங்கப்படும் ஒரு பாலமாகும். ஆனால் இந்த இட ஒதுக்கீடு முறையால் நாடே வளர்ச்சி அடையவில்லை என்பது போல் சிலர் பேசி நாம் பார்த்திருப்போம்.
இட ஒதுக்கீடு மூலம் சமூக நீதியை நிலைநாட்ட முடியும் என்பதற்கு நமது நாடு மிகப் பெரிய சான்றாக விளங்கி வருகிறது. நமது நாட்டில் எப்படி சாதி, மதம் மிகப்பெரிய சிக்கலை சமூகத்தில் உண்டாக்கி இருக்கிறதோ, அதைப்போல் தென்னாப்பிரிக்க நாட்டில் நிறத்தை வைத்து மக்களிடையே வேறுபாடு பார்க்கும் கொடிய நோய் இன்று வரை இருந்து வருகிறது.

அங்குள்ள கருப்பின மக்களுக்கு எந்த ஒரு வாய்ப்பும்,வசதியும், கல்வியும் வழங்கப்படாமல் இருந்த நிலையில் அவர்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 82% கறுப்பின மக்கள் வாழும் ஒரு நாட்டின் கிரிக்கெட் அணியில் ஒரு கருப்பின இளைஞர் கூட கேப்டனாக வர முடியவில்லை.
இந்த நிலையை மாற்றியவர் பவுமா 2021 ஆம் ஆண்டு தான் தென்னாபிரிக்க அணியில் முதல் முறையாக ஒரு கருப்பின வீரர் கேப்டனாக பொறுப்பேற்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கு முதல் படியாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அதிரடி மாற்றம் தான் காரணம்.
அதில் அணியில் விளையாடும் வீரர்களின் குறைந்தபட்சம் ஆறு வீரர்கள் வெள்ளையர்கள் அல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான். அதில் இரண்டு பேர் கருப்பின இளைஞர்களாக கண்டிப்பாக இருக்க வேண்டும்.ஒருவர் ஆசிய வம்சாவளியை சேர்ந்த தென்னாப்பிரிக்கா வீரராக இருக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் கொண்டுவரப்பட்டது.
இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணியில் திறமையுள்ள அனைத்து தரப்பு வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. இதன் காரணமாக பவுமாவுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்தது. எனினும் திறமை இல்லாமல் வெறும் கோட்டாவால் பவுமா வந்துவிட்டார் என்று பலரும் கேலி கிண்டல் செய்து இருக்கிறார்கள். ஆனால் பவுமா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 48 போட்டிகளில் விளையாடி 5 சதம், 7 அரை சதம் என சராசரி 43 என்ற அளவில் வைத்திருந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நான்கு சதம், 25 அரை சதம் என சராசரி 38 என்ற அளவில் வைத்திருக்கிறார். நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டு சதம், ஐந்து அரை சதம் என கிட்டத்தட்ட 60 என்ற அளவில் பவுமா சராசரி வைத்திருந்தார். அது மட்டும் இல்லாமல் தென்னாப்பிரிக்க அணியின் அபாரமாக வழி நடத்தி தொடர்ந்து எட்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றியைப் பெற வைத்தது.
தற்போது டெஸ்ட் போட்டிகளுக்கான உலகக்கோப்பை பெற்று தந்திருக்கிறார். இது அனைத்தும் இட ஒதுக்கீடு மீதான விமர்சனங்கள் கிண்டல்கள் ஆகியவற்றை சுக்கு நூறாக உடைத்து இருக்கிறது. ஏதோ திறமை இல்லாத வீரர்களுக்கு அணியில் இடம் வேண்டும் என்பதற்காக இட ஒதுக்கீடு முறை கொண்டுவரப்பட்டது என்று நம் நாட்டில் கூட பல தரப்பினரும் கேலி கிண்டல் செய்து வந்தனர்.
ஆனால் எங்களுக்கு திறமை இருந்தும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதால் தான் இட ஒதுக்கீடு முறையே கொண்டுவரப்பட்டது என்று பவுமா தனது பேட்டால் அடித்து சொல்லியிருக்கின்றார். இட ஒதுக்கீடு முறையில் வருபவர்கள் திறமைசாலிகளே, எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதால் தான் இட ஒதுக்கீடு தேவை என்பதை உலகம் முழுவதும் இட ஒதுக்கீடு ஏன் தேவை என்பதை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி தற்போது உணர்த்தி இருக்கின்றது.
இனி நம் நாட்டிலும் இட ஒதுக்கீடு தொடர்பாக சொல்லப்படும் கேலி விமர்சனங்களுக்கு தென்னாபிரிக்க அணியின் இந்த சாதனை ஒரு பதிலடி பாடமாக இருக்கும் என்று நெட்டிஷன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.