பெங்களூர் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது. பெங்களூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 46 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் குவிக்க 356 ரன்கள் பின்தங்கியது.
இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் சர்பராஸ்கான், ரிஷப் பண்ட், விராட் கோலி ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 462 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

இதன் மூலம் நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தகுதி பெற வேண்டும் என்றால் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
இல்லை என்றால் ஆஸ்திரேலிய தொடரில் வெற்றி பெற வேண்டிய சூழலில் தள்ளப்படும். தற்போது பெங்களூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி இருப்பதால் ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்டில் ஆவது இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த சூழலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி தோல்வியை தழுவியும் முதல் இடத்தில் இருக்கிறது.
68.06 வெற்றி சதவீதத்துடன் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 62.50 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும் இலங்கை அணி 55.56 வெற்றி சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. நியூசிலாந்து அணி 44.44.50 வெற்றி சதவீதத்துடன் 4வது இடத்திலும், இங்கிலாந்து அணி 43.06 வெற்றி சதவீதத்துடன் 5வது இடத்திலும், தென்னாப்பிரிக்க அணி 38.89 வெற்றி சதவீதத்துடன் 6வது இடத்திலும் இருக்கிறது.
வங்கதேசம்,பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் முறையே 7 மற்றும் 8, 9 ஆகிய இடங்களில் இருக்கிறது. இந்திய அணி முதல் இடத்தில் நிறைவு செய்ய வேண்டும் என்றால் ஆஸ்திரேலியாவில் ஒன்று அல்லது இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெல்ல வேண்டும். இலங்கை, தென்னாப்பிரிக்கா அணிகள் தோல்வியை தழுவ வேண்டும்.