மும்பை: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. தற்போது அனைத்து அணிகளும் தீவிரமாக டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகின்றன. அதன் முடிவில் புள்ளிப் பட்டியலில் அதிக வெற்றி சதவீதத்தை பெற்று முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இந்தியா தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. அடுத்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு உள்ள ஐந்து அணிகளின் பட்டியலையும், அந்த அணிகளால் அதிகபட்சம் எத்தனை வெற்றி சதவீதத்தை பெற முடியும் என்ற புள்ளிவிவரத்தையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து அணிகளுக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. இந்திய அணிக்கு இன்னும் ஆறு டெஸ்ட் போட்டிகள் மீதம் உள்ளன. அந்த ஆறு போட்டிகளிலும் இந்திய அணி வென்றால் அதிகபட்சம் 74.56 வெற்றி சதவீதத்தை பெறும்.
அதே போல ஆஸ்திரேலிய அணி அடுத்து இந்திய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த ஏழு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 76.32 வெற்றி சதவீதத்தை பெறும்.
இலங்கை அணிக்கு இன்னும் நான்கு போட்டிகள் மீதம் உள்ளன. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டும் போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி விளையாட உள்ளது. அந்த நான்கு போட்டிகளிலும் வென்றால் இலங்கை அணி 69.23 வெற்றி சதவீதத்தை பெறும்.
நியூசிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியிலும், இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. அந்த போட்டிகள் அனைத்திலும் வென்றால் நியூசிலாந்து அணி அதிகபட்சம் 64.29 வெற்றி சதவீதத்தை பெறும்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு இன்னும் ஐந்து போட்டிகள் மீதம் உள்ளன. வங்கதேசம், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக அந்த அணி அடுத்து விளையாட உள்ளது. அந்த ஐந்து போட்டிகளிலும் வென்றால் தென்னாப்பிரிக்கா அதிகபட்சமாக 69.44 வெற்றி சதவீதத்தை பெறும்.
மேற்கூறிய பட்டியல் இந்த ஐந்து அணிகளும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தங்களுக்கு மீதம் உள்ள அனைத்து போட்டிகளிலும் என்றால் எத்தனை வெற்றி சதவீதத்தை பெறும் என்ற கணக்கு மட்டுமே. இந்த ஐந்து அணிகளும் அனைத்து போட்டிகளிலும் வெல்வதற்கு வாய்ப்பு மிகவும் குறைவுதான். இதில் இந்திய அணி தனக்கு மீதமுள்ள ஆறு போட்டிகளில் குறைந்தபட்சம் நான்கு போட்டிகளில் வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடும். மற்ற நான்கு அணிகளுக்கும் நிச்சயமற்ற சூழ்நிலையே உள்ளது.