மும்பை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தகுதி பெற வேண்டுமென்றால் புள்ளி பட்டியலில் டாப் இரண்டு இடத்தை பிடிக்க வேண்டும். இந்திய அணி இந்த புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் சொந்த மண்ணில் பூஜ்யத்துக்கு மூன்று என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.
இதன் மூலம் இந்திய அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதன் பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெறும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே நேரடியாக இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதலிடத்தை பிடித்திருக்கிறது. 61.1 வெற்றி சதவீதத்துடன் இந்திய அணி தற்போது முதல் இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலிய அணி 57.69 வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், இலங்கை அணி 556 வெற்றி சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும், நியூசிலாந்து அணி 54.5 வெற்றி சதவீதத்துடன் நான்காவது இடத்திலும் தென்னாபிரிக்க அணி 54.17 வெற்றி சதவீதத்துடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. இந்த ஐந்து அணிகளுக்குமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்பு இருப்பதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் விறுவிறுப்பை பெற்று இருக்கிறது.
இங்கிலாந்து அணி, பாகிஸ்தான அணி, வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் முறையே 6, 7, 8 ,9 ஆகிய இடங்களில் இருக்கிறது. இந்த நான்கு அணிகளும் பைனலுக்கு செல்லும் வாய்ப்பை இழந்திருக்கிறது. இந்திய அணி குறைந்தது இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இன்னும் வெற்றி பெற்றால் நிச்சயம் இறுதி போட்டிக்கு தகுதி பெற வாய்ப்பு இருக்கின்றது.