லண்டன்: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஐசிசி கோப்பையை வென்று வரலாறு படைத்தது.
ஆனால், இந்தப் போட்டியின் இடையே தென்னாப்பிரிக்க வீரர்கள் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, ஆஸ்திரேலியா வீரர்கள் அவர்களை சீண்டியதாகவும், அப்போது "சோக்கர்ஸ்" (Chokers) என்ற வார்த்தையை பயன்படுத்தி தங்களை அவமானப்படுத்தும் வகையில் பேசியதாகவும் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா போட்டி முடிந்த பிறகு கூறினார்.

"சோக்கர்ஸ்" என்பது, தோல்வியடைந்து விடுவோமோ என்ற பதற்றத்தில் தங்கள் செய்யும் செயல்களில் சொதப்பி உண்மையிலேயே தோல்வியடைபவர்களை குறிக்கும் சொல். தென்னாப்பிரிக்க அணி கடந்த 27 ஆண்டுகளாக ஐசிசி நடத்தும் முக்கிய கிரிக்கெட் தொடர்களில் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு பலமுறை முன்னேறி, அதில் தோல்வியடைந்திருக்கிறது.
அந்த அணி பல உலகக் கோப்பைகளை வென்று இருக்கக்கூடிய திறமை வாய்ந்த அணியாக இருந்தும், இந்த பதற்றத்தால் பல முறை தோல்வியடைந்திருந்தது. இதைத்தான் ஒரு ஆயுதமாக பயன்படுத்தி இருக்கிறார்கள் ஆஸ்திரேலிய வீரர்கள்.
குறிப்பாக, தென்னாப்பிரிக்க அணி இந்த இறுதிப் போட்டியில் 282 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்தார்கள். அது இந்தப் போட்டியில் கடினமான இலக்காகவே இருந்தது. ஆனால், எய்டன் மார்க்ரம் மற்றும் டெம்பா பவுமா அபாரமாக ஆடியதால் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு பிறகு தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பேசுகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் அணி வீரர்களை சோக்கர்ஸ் என அழைத்தது குறித்து குற்றம் சுமத்தி இருக்கிறார். தென்னாப்பிரிக்க வீரர்களை பதற்றம் அடைய வைக்க வேண்டும் என்றே ஆஸ்திரேலிய அணி இந்த வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறது. ஆனால், அவர்களின் தந்திரம் வேலை செய்யவில்லை.
எய்டன் மார்க்கிரம் இந்த இறுதிப் போட்டியில் நான்காவது இன்னிங்சில் சதம் அடித்து 136 ரன்கள் எடுத்தார். துவக்க வீரரான அவர் தென்னாப்பிரிக்க அணி வெற்றிக்கு 5 ரன்கள் தேவை என்ற நிலையில் தான் அவர் ஆட்டமிழந்தார். டெம்பா பவுமா 66 ரன்கள் சேர்த்து கேப்டன் இன்னிங்ஸ் ஆடி இருந்தார்.