லண்டன்: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் இரண்டு நாட்கள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறுவது போலத் தோன்றியது. ஆனால், மூன்றாவது நாளில் ஆட்டத்தின் போக்கு தலைகீழாக மாறி, தென்னாப்பிரிக்கா அணி வெற்றியை நெருங்கி இருக்கிறது. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் பிட்ச்சின் தன்மை மாறியது தான் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. முதல் இன்னிங்ஸின் போது பிட்ச் மிகவும் கடினமாக இருந்தது.

பேட்டிங் செய்ய முடியாத அளவுக்கு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. அப்போது வானம் சற்று மேகமூட்டமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆஸ்திரேலியா அணி இரண்டாவது நாள் அன்று தனது இரண்டாவது இன்னிங்ஸில் 73 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.
அதன் பின்னர், மேகமூட்டம் சற்று குறைந்து வெயில் வந்தது. அப்போது பிட்ச்சின் தன்மை மாறியது. அங்கிருந்துதான் ஆட்டமும் மாறியது. 73 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலியா அணி, அதன் பிறகு எளிதாக ரன் சேர்த்து ஆச்சரியப்படுத்தியது. அலெக்ஸ் கேரி 43 ரன்களையும், மிட்செல் ஸ்டார்க் 57 ரன்களையும் எடுத்தனர். இதை அடுத்து, ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 207 ரன்கள் எடுத்தது.
அடுத்து தென்னாப்பிரிக்கா அணிக்கு 282 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தப் பிட்ச் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்றே பலரும் எண்ணினர். அதனால் தென்னாப்பிரிக்க அணியால் இந்த இலக்கை எட்ட முடியாது என்றுமே பலர் நினைத்தனர். ஏனெனில், முதல் மூன்று இன்னிங்ஸ்களிலும் 250 ரன்களைத் தாண்டி ரன் எடுக்கப்படாததால், நான்காவது இன்னிங்ஸில் ஒரு அணி எப்படி 282 ரன்கள் எடுக்க முடியும் என்ற பொதுவான எண்ணத்தின்படி பலரும் நினைத்தனர்.
ஆனால், அங்குதான் மாற்றம் நடந்தது. மூன்றாவது நாள் ஆட்டத்தில் பிட்ச் பேட்டிங் செய்ய எளிதாக இருந்தது. வேகப்பந்து வீச்சாளர்களால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. பந்து ஸ்விங் ஆகவில்லை. மேலும் பெரிதாக பவுன்ஸ் ஆகவில்லை. இத்தனைக்கும் ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட், பேட் கம்மின்ஸ் எனத் தலைசிறந்த மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் ஒன்றாகப் பந்துவீசினர். அப்படி இருந்தும் அவர்களால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே எடுக்க முடிந்தது.
தென்னாப்பிரிக்க அணியின் துவக்க வீரர் எய்டன் மார்க்ரம் சதம் அடித்தார். கேப்டன் டெம்பா பவுமா அரை சதம் அடித்தார். அவர்கள் இருவரும் மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென்னாப்பிரிக்க அணி மூன்றாம் நாள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 213 ரன்களை எடுத்துள்ளது. இன்னும் வெற்றிக்கு 69 ரன்கள் மட்டுமே தேவை.
இன்னும் இரண்டு நாள் ஆட்டம் மீதம் உள்ளது. மேலும், தென்னாப்பிரிக்க அணியின் கையில் எட்டு விக்கெட்டுகள் உள்ளன. நான்காவது நாள் அன்று ஒருவேளை ஆட்டம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக மாறினாலும் கூட, இந்த 69 ரன்களை எடுத்துவிட வாய்ப்பு உள்ளது. எனவே, இந்தப் போட்டியில் மூன்றாவது நாள் அன்று நடந்த பிட்ச்சின் மாற்றம் தென்னாப்பிரிக்காவுக்கு சாதகமாக அமைந்தது. தற்போது அந்த அணி வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.