லண்டன்: ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நடந்த ஒரு சர்ச்சைக்குரிய நிகழ்வு கிரிக்கெட் உலகில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் பெட்டிங்ஹாம் பந்தை கையில் எடுத்ததாக ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா அவுட் கேட்டது, போட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், நடுவர்களின் முடிவால் பெட்டிங்ஹாம் அவுட் இல்லை என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி ஏமாற்று வேலையில் ஈடுபட்டதாக சில ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இப்போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கில் திணறிக் கொண்டிருந்தது. அந்த அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், டேவிட் பெட்டிங்ஹாம் மட்டுமே ஓரளவு ரன்கள் குவித்து வந்தார்.
அப்போது, பியூ வெப்ஸ்டர் வீசிய ஓவரில், டேவிட் பெட்டிங்ஹாம் பந்தை இன்சைட் எட்ஜ் செய்தார். பந்து அவரது காலின் பேடுக்குள் சென்று மாட்டிக்கொண்டது. இவ்வாறு மாட்டிக் கொண்ட பந்தை டேவிட் பெட்டிங்ஹாம் எடுத்து கீழே வீசினார். அப்போது அருகில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த உஸ்மான் கவாஜா, டேவிட் பெட்டிங்ஹாம் பந்தை கையாண்டதாகக் கூறி, 'ஹேண்டில் தி பால்' (Handled the Ball) விதிப்படி அவுட் கேட்டார்.
கிரிக்கெட் விதிகளின்படி, ஒரு பேட்ஸ்மேன் பந்துவீசப்பட்ட பிறகு, பந்தை வேண்டுமென்றே கையில் எடுத்தால் அல்லது பிடித்தால், அதற்கு அவுட் கேட்கலாம். அதே சமயம், இந்த சம்பவத்தின் போது பந்து "டெட் பால்" ஆகிவிட்டது. அதாவது, பந்து வீசப்பட்ட பிறகு பேட்ஸ்மேனின் உபகரணங்கள் அல்லது உடைக்குள் சிக்கிக் கொண்டிருந்தால், அந்த பந்துக்கான ஆட்டம் முடிந்துவிட்டது எனக் கருதப்படும். அப்போது அவுட் கேட்க முடியாது என்பது விதி.
நடுவர்கள் இந்த விதியை சுட்டிக்காட்டி, டேவிட் பெட்டிங்ஹாம் அவுட் இல்லை என அறிவித்தனர். இந்த சம்பவத்தின் போது உஸ்மான் கவாஜா மட்டுமே அவுட் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும், ஆஸ்திரேலிய வீரர்கள் இதற்கு முன்பு பலமுறை அவுட் இல்லாதவற்றை அவுட் கேட்டு எதிரணியை வீழ்த்தியுள்ளனர். அந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி, ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் ஏமாற்று வேலைக்கு முயற்சி செய்துள்ளது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இறுதியாக, தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 74 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்த சர்ச்சைக்குரிய நிகழ்வு, இப்போட்டியின் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.