லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. தென்னாபிரிக்க அணியில் இடம் பிடித்திருந்த பவுமாவை பலரும் கோட்டா வீரர் என விமர்சித்திருந்த நிலையில், அவர் எப்படி சாம்பியன் பட்டத்தை வென்றார் என்பதை தற்போது பார்க்கலாம்.
தென்னாப்பிரிக்க அணியில் நிறவெறிக் கொள்கை தீவிரமாக இருந்ததன் காரணத்தால் ஐசிசி தென்னாப்பிரிக்கா அணிக்கு தடை விதித்திருந்தது. இதனை அடுத்து தன் நிறவெறிக் கொள்கை ஒழிக்கப்பட்டதை அடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் 1992 ஆம் ஆண்டு மீண்டும் தென்னாப்பிரிக்க அணி அடி எடுத்து வைத்தது.

இந்த தருணத்தில் தென் ஆப்பிரிக்க அணியில் தொடர்ந்து வெள்ளையர்களுக்கு தான் வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. அப்படி தென்னாப்பிரிக்கா அணியில் கருப்பு இன வீரருக்கு வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் வெறும் வேக பந்துவீச்சாளராக தான் இருந்திருப்பார்.
இந்த தருணத்தில் தான் தென்னாப்பிரிக்க அணியில் அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பு கிடைக்கும் வேண்டும் என்பதற்காக கோட்டா முறை அமல்படுத்தப்பட்டது. அதில் பிளேயிங் லெவனில் வெள்ளையர் அல்லாத ஆறு வீரர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நடைமுறை கொண்டுவரப்பட்டது. இதில் இரண்டு கருப்பின இளைஞர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும் ஆசிய வம்சாவளியை சேர்ந்த தென்னாப்பிரிக்காவில் இருக்கும் வீரர்களுக்கும் இடம் தர வேண்டும் என்று சிஸ்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் தான் தென்னாப்பிரிக்கா அணியில் பவுமா இடம் பிடித்தார். இதன் காரணமாக பவுமா எப்போதாவது சரியாக விளையாடவில்லை என்றால் திறமை இல்லாமல் கோட்டாவில் வந்துவிட்டார் என்று பலரும் அவரை விமர்சித்து வந்தனர். இது போன்று தென்னாபிரிக்க அணியின் கேப்டனாக பவுமா நியமிக்கப்பட்ட போது கருப்பின வீரர் ஒருவர் தென்னாபிரிக்க அணியின் கேப்டனானது இதுவே முதல் முறை என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.
ஆனால் அப்போதும் கூட பவுமாவின் திறமையை யாரும் அங்கீகரிக்கவில்லை. பலரும் அவரை கேலி கிண்டல் தான் செய்தார்கள். அணியில் இருக்கும் வீரர் கூட பவுமாவுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. ஆனால் இது எல்லாம் தனது பொறுமை மூலம் எதிர்கொண்ட பவுமா அணியை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டார்.
விளையாட்டு பலதரப்பு மக்களை ஒன்றிணைக்கும் பாலம் என்பதை உணர்ந்த பவுமா தென்னாப்பிரிக்க அணியை உலக கிரிக்கெட்டில் முதன்மையான அணியாக நிலை நிறுத்த வேண்டும் என்ற ஒரே கொள்கையுடன் தீவிரமாக உழைத்தார். இதனால் வீரர்களின் ஆதரவு பவுமாவுக்கு கிடைத்தது. தாம் ஒரு கருப்பின வீரன் என்பதால் தமது இனத்தை சேர்ந்த வீரர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்காமல் அனைத்து தரப்பு வீரர்களுக்கும் ஆதரவளித்து நட்பு ரீதியுடன் அணியை கட்டமைத்தார்.
தென்னாப்பிரிக்காவுக்கு கோப்பையை பெற்றுத்தர வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளை அனைத்து வீரர்களின் மனதிலும் விதைத்தார். இதன் காரணமாக தங்களையே அறியாமல் பல தென்னாப்பிரிக்கா வீரர்கள் ஒன்றிணைந்தனர். இதன் காரணமாக அணிக்குள் இருந்த வேறுபாடுகள் கலைந்தது. முதலில் கேப்டனாக தான் ரன் குவித்தால் மட்டுமே மற்ற வீரர்கள் சரியாக விளையாடுவார்கள் என்பதை உணர்ந்த பவுமா சிறப்பாக விளையாடத் தொடங்கினார்.
இதுவரை சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 48 போட்டிகளில் விளையாடி 5 சதம், 7 அரைச்சதம் என 43 என்ற சராசரியை பவுமா வைத்திருந்தார். இதேபோன்று 64 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3708 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் நான்கு சதம், 25 அரை சதம் அடங்கும். நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் மட்டும் பவுமா, 13 இன்னிங்சில் 711 ரன்கள் சேர்த்தார். இதில் 2 சதம், 5 அரைசதம் அடங்கும். இடிதல் அவருடைய சராசரி கிட்டதட்ட 60 ஆகும். அணிக்கு தேவையான கட்டத்தில் பார்ட்னர்ஷிப் அமைத்து பேட்டிங் வரிசையை பலமாக மாற்றுவது தான் பவுமாவின் வேலையாக இருந்தது.
இதனால் பவுமா மீது ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் நல்ல மரியாதை ஏற்பட்டது. இதனால் தான் வீரர்கள் பலரும் தென்னாபிரிக்க அணி சாம்பியன் பட்டத்தை வென்றதும் பவுமா தான் எங்களை அபாரமாக வழி நடத்தினார் என்று பாராட்டினர். பவுமா என்ற பெயரை சொன்னாலே கோட்டா வீரர் என கேலி கிண்டல் செய்த ரசிகர்களே நேற்று பவுமா பெயரை சொன்னவுடன் ஆர்ப்பரித்து கொண்டாடினார்கள்.