லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11 அன்று தொடங்கிய 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதி வருகின்றன. இந்தப் போட்டியின் மூன்றாவது நாள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த மூன்றாவது நாள் ஆட்டம் துவங்குவதற்கு முன், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து, இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதற்கான காரணம் குறித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பும், சில தவறான புரிதல்களும் ஏற்பட்டன. சர்வதேச கிரிக்கெட் அமைப்பு (ICC) வெளியிட்ட பதிவில், "அகமதாபாத்தில் நேற்று (ஜூன் 12) நடைபெற்ற விமான விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார்கள்" என்று விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

இதை அறிந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வெளிநாட்டில் நடக்கும் ஒரு கிரிக்கெட் போட்டிக்கு, இந்தியாவில் நடந்த விபத்துக்காக மௌன அஞ்சலி செலுத்தியது அறிந்து நெகிழ்ச்சியடைந்தனர். ஆனால், இந்தப் போட்டியில் கருப்பு பட்டை அணிந்ததற்கு மற்றொரு முக்கிய காரணமும் உள்ளது.
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான அந்த விமானம் லண்டனை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மேலும், அந்த விமானத்தில் பயணித்தவர்களில் 50-க்கும் மேற்பட்டோர் யுனைடெட் கிங்டம் நாட்டைச் சேர்ந்தவர்கள். அதில் பெரும்பாலானவர்கள் லண்டன் நகரை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதனாலேயே லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பொதுவாகவே, எந்த நாட்டில் கிரிக்கெட் தொடராக இருந்தாலும், அதை அதிக அளவில் பார்ப்பது இந்திய ரசிகர்களாகவே உள்ளனர். அதனால், இந்தியாவில் நடைபெற்ற விபத்து என்ற வகையிலும், மேலும் இந்த போட்டி நடைபெறும் லண்டன் நகரைச் சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கி இறந்ததாலும், இந்த போட்டியில் கருப்பு பட்டை அணிந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது.
இந்த இறுதிப் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 207 ரன்கள் எடுத்து, தென்னாப்பிரிக்கா அணிக்கு 282 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயம் செய்தது.