லண்டன்: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெறும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். அதற்குக் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், குறிப்பாக இறுதிப் போட்டிகளில் இதுவரை தோல்வியைச் சந்திக்காத மூன்று வீரர்கள் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்தது ஒரு முக்கியக் காரணமாகப் பார்க்கப்பட்டது. அவர்கள் மூவருமே அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆவர்.
இந்த மூவரும் இணைந்து விளையாடிய எந்த ஒரு இறுதிப் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்ததே இல்லை. அதுமட்டுமின்றி, ஜோஷ் ஹேசில்வுட் தனது கிரிக்கெட் வாழ்வில் விளையாடிய ஒன்பது இறுதிப் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தார். அண்டர் 19, டி20 லீக் தொடர்கள், ஆஸ்திரேலிய அணிக்காக என எந்த தொடரின் இறுதிப் போட்டியில் ஆடி இருந்தாலும் அவர் அந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இருந்தார்.

சமீபத்தில் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இறுதிப் போட்டி வெற்றிகளிலும் ஜோஷ் ஹேசில்வுட்டின் பங்களிப்பு இருந்தது. அதேபோல, மிட்செல் ஸ்டார்க் தான் விளையாடிய இறுதிப் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றிருந்தார். பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக இதுவரை எந்த ஒரு இறுதிப் போட்டியிலும் தோல்வியடைந்ததில்லை.
இப்படி இவர்கள் மூவரும் இறுதிப் போட்டி என்றாலே வெற்றி பெறுபவர்கள் என்ற நிலை இருந்தது. இவர்கள் மூவரும் இணைந்து விளையாடியதால் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறும் என்ற நிலை இருந்தது. இந்த அதிர்ஷ்டம் சார்ந்த காரணம் மட்டுமல்லாமல், இவர்கள் மூவருமே உலகின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களாக இருப்பதாலும் ஆஸ்திரேலிய அணியே இந்த இறுதிப் போட்டியில் வெல்லும் என பல ரசிகர்கள் நினைத்தனர்.
இந்தப் போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் ஆதிக்கம் செலுத்தி இருந்தனர். ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்கள் எடுத்த நிலையில், தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதற்கு முக்கிய காரணம் இவர்கள் மூவரின் பந்துவீச்சு தான்.
இந்த நிலையில், 282 ரன்கள் என்ற இலக்கை தென்னாப்பிரிக்கா அணி எட்டாது, இவர்கள் மூவரும் தென்னாப்பிரிக்கா அணியைக் காலி செய்து விடுவார்கள் என்று ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால், நடந்ததோ வேறு. தென்னாப்பிரிக்க அணியின் எய்டன் மார்க்ரம் 136 ரன்கள் எடுத்தார். அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா அரை சதம் அடித்தார்.
இதை அடுத்து, தென்னாப்பிரிக்க அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது. இதன் மூலம் முதன்முறையாக 27 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா தனது முதல் ஐசிசி கோப்பையை வென்றது.
டெம்பா பவுமா இதுவரை கேப்டனாக எந்த ஒரு டெஸ்ட் போட்டியிலும் தோல்வியைச் சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது இந்த இறுதிப் போட்டியிலும் தொடர்ந்தது. ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார்க், ஹேசில்வுட் மற்றும் கம்மின்ஸ்ஸின் அதிர்ஷ்டத்தை பவுமாவின் அதிர்ஷ்டம் உடைத்தது என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு வருகிறார்கள்.