லண்டன்: ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி சாதகமான நிலையில் உள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் அணுகுமுறையை முன்னாள் வீரர்கள் மேத்யூ ஹைடன் மற்றும் டேல் ஸ்டெய்ன் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமாவின் விக்கெட்டை எடுப்பதற்கு முயற்சிக்காமல், அவர் களமிறங்கியபோது ஆஸ்திரேலியா தற்காப்புடன் விளையாடியதாக மேத்யூ ஹைடன் குற்றம்சாட்டியுள்ளார். இதன் காரணமாகவே போட்டி ஆஸ்திரேலியாவின் கைகளை விட்டுச் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 212 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 207 ரன்கள் எடுக்க, தென் ஆப்பிரிக்கா அணிக்கு 282 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கு கடினம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆடுகளத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக தென் ஆப்பிரிக்கா எளிதாக பேட்டிங் செய்து வருகிறது.
அந்த அணியின் துவக்க வீரர்களான ரியான் ரிக்கெல்டன் 10 ரன்களிலும், வியான் முல்டர் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து எய்டன் மார்க்ரம் மற்றும் டெம்பா பவுமா இணைந்து பேட்டிங் செய்தனர். பவுமா பேட்டிங் செய்ய வந்தபோது ஆஸ்திரேலியா கையாண்ட உத்தியை ஹைடன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து பேசிய மேத்யூ ஹைடன், "ஆஸ்திரேலிய அணியின் தற்காப்பு அணுகுமுறை இங்கிருந்துதான் தொடங்கியது. அவர்கள் எப்படி விக்கெட்டுகளை எடுக்கப் போகிறார்கள், எத்தனை விரைவாக அதை எடுக்கப் போகிறார்கள் என்பதை வைத்துதான் அது நிர்ணயிக்கப்படுவதாக இருந்தது. அவர்கள் வியான் முல்டர் மற்றும் ரியான் விக்கெட்களை வீழ்த்தியதற்குப் பிறகு பவுமாவுக்கு அழுத்தம் அளித்திருக்க வேண்டும்.
கவர் திசையில் ஃபீல்டர்களை நிறுத்தி பவுமாவுக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். அங்கு தற்காப்பு முறையை அனுமதிக்காமல், தாக்குதல் பாணியில் ஃபீல்டிங்கை நிறுத்தி இருக்க வேண்டும். முதல் இரண்டு பந்துகள் சற்று மேலே எழும்பி இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். தென் ஆப்பிரிக்க அணி மூன்று விக்கெட்டுகளை இழந்திருக்கும். ஆஸ்திரேலியாவிடம் இந்த போட்டியின் முழு கட்டுப்பாடும் இருந்திருக்கும்.
என்னைப் பொறுத்தவரை அதுதான் இந்த போட்டியில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்த விளையாட்டு மிக எளிதாக மாறிவிடும். ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வது, கூட்டணியை வளர விடுவது, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது - அப்படித்தான் ஆஸ்திரேலிய பௌலிங் கைகளில் இருந்து இந்த போட்டி தென் ஆப்பிரிக்கா வசம் சென்று விட்டது.
இது பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் சூழ்நிலைதான். ஆனால் நீங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தக்கவைக்க வேண்டும் என்றால் 10 விக்கெட்கள் எடுக்க வேண்டும். முதல் மூன்று விக்கெட்டுகளை ஆட்டத்தில் இருந்தும் நீங்கள் விரைவாக நீக்க வேண்டும்" என்றார் மேத்யூ ஹைடன்.
அடுத்து பேசிய தென் ஆப்பிரிக்கா பௌலிங் ஜாம்பவான் டேல் ஸ்டெய்ன், "எனக்கும் அது ஆச்சரியமாகத்தான் இருந்தது. நீங்கள் ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். பந்து எத்தனை கீழே சென்றது என்பதை நாம் பார்த்தோம். பந்து ஸ்லிப் திசையை நோக்கி செல்லவில்லை. நேற்றும் அதுதான் நடந்தது. பந்து ஸ்லிப் திசையை நோக்கி செல்லவில்லை என்றால், கேட்ச் பிடிக்கப்படும் இடங்களில் ஃபீல்டர்களை நாம் நிறுத்த வேண்டும்" என்றார்.