லண்டன்: ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஜூன் 11 அன்று மோத உள்ளன. இந்த முக்கியமான போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இறுதிப் போட்டிக்கு சில தினங்களுக்கு முன்பு இதே மைதானத்தில் இந்திய டெஸ்ட் அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. இந்தத் தொடரின் முதல் போட்டி ஜூன் 20 அன்று துவங்க உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதும் போட்டி ஜூலை 10 அன்றுதான் நடைபெற இருக்கிறது.

அதுவும் இந்தத் தொடரின் மூன்றாவது போட்டியாக மட்டுமே நடைபெற உள்ளது. எனவே, இப்போது லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், அந்த மைதானத்தில்தான் இந்திய அணி பயிற்சி செய்து வருகிறது.
அதே சமயம், லார்ட்ஸ் மைதானத்தில் அடுத்த இரு தினங்களுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் விளையாட உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு பயிற்சி செய்ய இடம் மறுக்கப்பட்டது. அதனால், ஆஸ்திரேலிய வீரர்கள் மூன்று மணி நேரம் பயணம் செய்து வேறு இடத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சி செய்தனர். இது ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே கிரிக்கெட் மோதல் அடுத்த கட்டத்தை எட்டி இருப்பதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் கிரிக்கெட் உலகின் முக்கிய முடிவுகளை எடுக்கும் மையமாக விளங்கி வருகிறது. இங்குதான் மெரில்போன் கிரிக்கெட் கிளப் (MCC) இயங்கி வருகிறது.
ஆரம்ப கால கிரிக்கெட் விதிகளை இயற்றியதில் இந்த அமைப்புக்கு அதிக பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போதும் இந்த அமைப்பு கிரிக்கெட் உலகில் அதிக செல்வாக்கு மிகுந்த அமைப்பாக உள்ளது. மேலும், இதே மைதானத்தில் உலக கிரிக்கெட் கமிட்டி செயல்பட்டு வருகிறது. லார்ட்ஸ் மைதானத்தின் கட்டிடங்களுக்கு உள்ளே உலக கிரிக்கெட் கமிட்டியின் கூட்டம் நேற்று நடைபெற்றது. வெளியே இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது.
அதாவது, லார்ட்ஸ் மைதானத்தில் பயிற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லாத இந்திய அணி, சரியாக இந்தக் கூட்டம் நடைபெற்ற போது வெளியே பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இதை சுட்டிக்காட்டி இங்கிலாந்து ஊடகங்கள் இந்திய கிரிக்கெட் அணியின் ஆதிக்கத்தை விவரித்து இருக்கின்றன. தற்போது சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் தலைவராக முன்னாள் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இருப்பது குறிப்பிடத்தக்கது.