ஓப்பனிங் ஜோடி
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இவர்கள் இருவரும் முதல் முறையாக இங்கிலாந்து மண்ணில் ஓப்பனிங் களமிறங்குகின்றனர். எனினும் எந்தவித தயக்கமும் இன்றி நியூசிலாந்து பந்துவீச்சை சமாளித்து முதல் விக்கெட்டிற்கு 62 ரன்களை சேர்த்தனர்.
திடீர் விக்கெட்டுகள்
சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா 34 ரன்களுக்கு கெயில் ஜேமிசன் பந்துவீச்சில் அவுட்டானார். அவரை தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களிலேயே சுப்மன் கில் 28 ரன்களுக்கு வாக்னரிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பின்னர் களமிறங்கிய புஜாரா - விராட் கோலி ஜோடி சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ட்ரெண்ட் போல்ட் அதற்கு முட்டுக்கட்டை போட்டார். அவர் வீசிய இன் ஸ்விங்கில் நட்சத்திர வீரர் புஜாரா 8 ரன்களுக்கு எல்.பி.டபள்யூ முறையில் அவுட்டானார். 62 ரன்களுக்கு முதல் விக்கெட் விழுந்த நிலையில் 88 ரன்களுக்கு 3 விக்கெட்கள் சரிந்தது.
கேப்டன்களின் பார்ட்னர்ஷிப்
இதன் பின்னர் ஜோடி சேர்ந்துள்ள கேப்டன் விராட் கோலி - துணை கேப்டன் ரஹானே நிதனாமாக விளையாடி ரன்களை சேர்த்து வருகின்றனர். இதன் காரணமாக இந்திய அணி தற்போது 3 விக்கெட் இழப்புக்கு 100 ரன்களை கடந்துள்ளது. வழக்கமாக பேட்டிங் களமிறங்கிய சில மணி நேரங்களில் அதிரடியை தொடங்கும் விராட் கோலி, பிட்ச்-ன் தன்மையை உணர்ந்து மிக நிதானமாக விளையாடி வருகிறார். இதுவரை 124 பந்துகளை சந்தித்துள்ள அவர் 44 ரன்களை அடித்துள்ளார். அரை சதம் அடித்துவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் வானிலை விளையாடிவிட்டது.
வெளிச்சமின்மை
சவுத்தாம்டனில் இன்று மதியத்திற்கு பின்னர் மழை பொழிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி உணவு இடைவெளிக்கு பின்னர் வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் வெளிச்சமின்மை காரணமாக போட்டி 3 முறை நிறுத்தப்பட்டது. பின்னர் சரியான வெளிச்சம் இல்லாததால் 2ம் நாள் ஆட்டம் நிறுத்திக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 64.4 ஓவர்கள் முடிவடைந்துள்ள நிலையில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 44 ரன்களுடனும் ரஹானே 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.