மழை குறுக்கீடு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறுவதாக இருந்த சவுத்தாம்டன் நகரில் நேற்று இரவு முதல் மழை பொழிய தொடங்கியது. இன்று மதியம் சற்று மழை பொழிவு நிற்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தொடர் மழையால் முதலில் டாஸ் பாதிக்கப்பட்டது. பின்னர் உணவு இடைவெளி வரையிலான ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு
இந்திய நேரப்படி மாலை 6.30 மணி முதல் மழைப்பொழிவு நின்றுள்ளது. இதனையடுத்து மைதான ஊழியர்கள், மழைநீரை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். இரு அணி வீரர்களும் பவுண்டரி எல்லைக்கு அருகில் நின்று ஆவலுடன் பார்த்துக்கொண்டிருக்க இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு அதிகாரிகள் குழு மைதானத்தை ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆய்வு முடிவு
இந்நிலையில் மைதானத்தில் ஆய்வு நடத்திய அதிகாரிகள், இன்று போட்டி நடத்த சரியான சூழல் இல்லை எனக்கூறி முதல் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்துள்ளனர். இதனால் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி டாஸ் கூட போடப்படாமல் பாதிக்கப்பட்டுள்ளது.
நாளை எப்படி இருக்கும்
சவுத்தாம்டன் நகரில் போட்டி நடைபெறும் 5 நாட்கள் மட்டுமல்லாமல் ரிசர்வ் டே-விலும் (6வது நாள்) கருமேகங்கள் சூழ்ந்திருக்கும் என்றும், அவ்வபோது மழை பொழியும் எனத்தெரிவிக்கப்பட்டது. அறிவித்தபடியே முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2வது நாளில் சற்று மேகம் தெளிவாக இருக்கும் எனக்கூறப்பட்டுள்ளது. எனவே நாளையாவது ஆட்டம் தொடங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.