முதல் இன்னிங்ஸ் ஆட்டம்
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்ஸ் முடிவில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து 3ம் நாள் முடிவு வரை 2 விக்கெட்களை இழந்து 101 ரன்களை எடுத்துள்ளது. நேற்று 4ம் நாள் ஆட்டம் தொடங்குவிருந்த சூழலில் விடாது கொட்டிய மழையினால் ஆட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டது.
ரிசர்வ் டே ஆட்டம்
ஏற்கனவே 2 நாட்கள் ஆட்டம் முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளதால் ரிசர்வ் டே எனப்படும் 6வது நாள் ஆட்டம் கண்டிப்பாக நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விடுபட்ட ஓவர்கள் வீசப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அதுகுறித்து ஐசிசி முக்கிய முடிவை எடுத்துள்ளது.
முக்கிய முடிவு
ரிசர்வ் டே எனப்படும் 6வது நாள் போட்டிக்கான டிக்கெட்களின் விற்பனைகள் தொடங்கியுள்ளது. இறுதிப்போட்டிகான டிக்கெட் விலைகள் எப்போதுமே சற்று அதிகமாக இருக்கும். ஆனால் சவுத்தாம்டனில் விடாது கொட்டும் மழை காரணமாக டிக்கெட் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. ரோஸ் பவுல் மைதானத்தில் முந்தைய டிக்கெட் விலைகள் அந்நாட்டின் மதிப்பின்படி 150 பவுண்ட்ஸ்கள் ( ரூ.15,444), 100 பவுண்ட்ஸ்கள் ( ரூ.10,296), 75 பவுண்ட்ஸ்கள் ( ரூ.7,722) விற்கப்பட்டது. ஆனால் தற்போது ரிசர்வ் டே ஆட்டத்திற்கான டிக்கெட் விலைகள் 100 பவுண்ட்ஸ்கள் (ரூ.10,296), 75 பவுண்ட்ஸ்கள் (ரூ.7,722), 50 பவுண்ட்ஸ்கள் ( ரூ.5,148) என குறைத்து விற்கப்படுகின்றன.
6ம் நாள் வானிலை
ரிசர்வ் டே ஆட்டமும் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டால், போட்டி சமனில் முடிவடைந்து இரு அணிகளும் சாம்பியன்களாக அறிவிக்கப்படுவார்கள். சவுத்தாம்டனின் வானிலையை பொறுத்தவரை நாளை தினமும் மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் இன்று நடைபெறவிருக்கும் 5வது நாள் ஆட்டத்திலும் மழை அவ்வபோது குறுக்கிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.