
யார் வெற்றியாளர்?
இந்த நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பிளேயிங் கண்டிஷன்ஸ்களை ஐசிசி இதுவரை வெளியிடாமல் இருந்து வருகிறது. இதனால், இறுதிப் போட்டி ஒருவேளை டிராவில் முடிந்தாலோ, இரண்டாம் இன்னிங்ஸில் டார்கெட் சேஸிங்கில் ஆட்டம் சமனில் முடிந்தாலோ அல்லது போட்டியே நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டாலோ, யார் வெற்றியாளர்? என்பது குறித்த தெளிவு இதுவரை பிசிசிஐ-க்கு கூட இல்லை.

என்ன நடவடிக்கை?
சரி.. அதென்ன பிளேயிங் கண்டிஷன்ஸ்?.. எந்தவொரு கிரிக்கெட் தொடர் நடைபெற்றாலும், அதன் விதிமுறைகளை ஐசிசி வகுத்து கொடுப்பது தான் பிளேயிங் கண்டிஷன். அதாவது ஒவ்வொரு நாளும் எத்தனை ஓவர்கள் வீச வேண்டும்?, போட்டி தடைப்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? போட்டி ரத்தானால் என்ன செய்ய வேண்டும்? ஓவர்கள் பொறுமையாக வீசினால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்பது தொடங்கி. அம்பயர்கள் பயன்படுத்தும் லைட் ரீடிங் மீட்டர் வரை அனைத்து விதிமுறைகளும் வகுக்கப்பட்டிருக்கும். அதன்படி தான் அம்பயர்கள் செயல்பட முடியும்.

இத்தனை குழப்பம்
அதன்படி, இந்தியா - நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான விதிமுறைகளை தான் பிசிசிஐ கோருகிறது. போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை என்பதால் தான் இத்தனை அவசரம். இதுவொரு வழக்கமான டெஸ்ட் தொடர் கிடையாது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல். நடப்பதோ முதன்முறை. அதனால் தான் இத்தனை குழப்பம்.

ஷாக் ரிப்போர்ட்
இந்த சூழலில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பிளேயிங் கண்டிஷனை ஐ.சி.சி மறுபரிசீலனை செய்து வருகிறது. இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான ஒரு அறிக்கையின்படி, இந்த வார இறுதிக்குள் பிளேயிங் கண்டிஷன் வெளியிடப்படும். எனினும், போட்டி டிராவானால் இரு அணிகளும் சேர்ந்து வெற்றியாளர்களாக அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

30 மணி நேரம்
இதுகுறித்து ஐசிசி தரப்பில் கூறுகையில், "மொத்தம் 5 நாட்கள் கொண்ட இந்த டெஸ்ட் போட்டியில், 30 மணி நேரத்தில் ஆட்டம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். முதல் ஐந்து நாட்களில் மொத்தம் 30 மணிநேரம் விளையாடாவிட்டால் மட்டுமே, 'ரிசர்வ் டே' செயல்பாட்டுக்கு வரும். அதாவது, ஆறாவது நாளும் போட்டி நடைபெறும்" என்று கூறப்பட்டுள்ளது.

முழு விவரம்
அதேசமயம், "முதன்முறையாக விளையாடப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இரு அணிகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டால், அது அவ்வளவு சிறப்பாக இருக்காது. ஏதாவது ஒரு அணியே வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட வேண்டும். இதுகுறித்த முழு விவரம் இந்த வாரம் வெளியாகும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











