சிறப்பான தொடக்கம்
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக துணை கேப்டன் ரஹானே 49 ரன்களும், கேப்டன் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் கெயில் ஜேமிசன் 5 விக்கெட்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸின் தொடக்கத்தில் பலமாக இருந்த நிலையில் 5ம் நாள் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்களையும் மலமலவென இழந்தது. இறுதியில் 249 ரன்களுக்கு அந்த அணியின் முதல் இன்னின்ஸ் முடிவுக்கு வந்துள்ளது.
ரிசர்வ் டே
இதன் பின்னர் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியுள்ள இந்தியா, சிறப்பாக விளையாடி வருகிறது. இந்நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி நாள் ஆட்டம் இன்று விளையாடப்படுகிறது. ஆனால் இதனை தீர்மானிக்க வருண பகவான் கருணை காட்டினால் மட்டுமே முடியும். ஏற்கனவே முதல் நாள் மற்றும் 4வது நாள் ஆட்டங்கள் மழையின் காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. இதன் காரணமாகவே ரிசர்வ் டே இன்று விளையாடப்படுகிறது. இன்று வானிலை கைகொடுத்தால் மட்டுமே முடிவு எட்டப்படும்.
வானிலை
இந்நிலையில் இன்றைய வானிலை சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. இதுவரை நடந்த 5 நாட்களை விட இன்று வானிலை மிக நன்றாகவே இருக்கும் எனக்கூறப்படுகிறது. குறிப்பாக கருமேகங்கள் விலகி இன்று நேரம் போக போக நல்ல வெயிலை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றைய போட்டியில் ஒரு ஓவர்கள் கூட வானிலையால் பாதிக்கப்படாது.
பரபரப்பு
இன்று கடைசி நாள் ஆட்டம் என்பதால் இரு அணிகளும் மிக வேகமாக ஸ்கோரை உயர்த்த முற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை இலக்காக நிர்ணயித்தால், நியூசிலாந்து அணி அந்த இலக்கை அடைய நினைக்காமல், தடுப்பாட்டதால் போட்டியை சமன் செய்யவே முற்படும். எனவே இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.