
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இந்த போட்டி சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் தொடங்கியது. நேற்று மழையால் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில் இன்றைய போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

ஆச்சரியம்
இதனையடுத்து தேசிய கீதத்திற்காக இந்திய அணி வீரர்கள் அணி வகுத்து நின்றபோது ரசிகர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அவர்கள், இந்திய தடகள ஜாம்பவான் மில்கா சிங்கின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக தங்களது கைகளில் கருப்பு பேண்ட்-களை அணிந்து விளையாடி வருகின்றனர்.

இந்திய வீரர்கள் மரியாதை
91 வயதாகும் மில்கா சிங்கிற்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பெற்று வந்த அவர், இன்று காலை சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு இந்திய விளையாட்டு வீரர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த மாதம் அவரின் மனைவி நிர்மலா கவுரும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தடுமாற்றம்
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய நிலையில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது. தற்போது கேப்டன் விராட் கோலி மற்றும் சட்டீஸ்வர் புஜாரா இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்து வருகின்றனர். உணவு இடைவெளி வரை இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 69 ரன்களை எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications