கொட்டும் மழை
இங்கிலாந்து நாட்டின் வானிலை அறிக்கைப்படி சவுத்தாம்டனில் போட்டி நடைபெறும் 5 நாட்களும் கருமேகங்கள் சூழ்ந்து மழையின் குறுக்கீடு இருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக முதல் நாள் ஆட்டமே மழையின் குறுக்கீடால் பெரும் அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவுக்கு சிக்கல்
அந்தவகையில் எதிர்பார்த்ததை போல நேற்று இரவு முதல் சவுத்தாம்டனில் மழை கொட்டி வருகிறது. இதனால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல மழை பெய்துள்ளதால் பிட்ச்-ல் ஈரப்பதம் ஏற்பட்டு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நல்ல ஸ்விங் கிடைக்கும் சூழல் உள்ளது. ஆனால் இந்திய அணி ப்ளேயிங் 11ல் அஸ்வின் - ஜடேஜா என 2 ஸ்பின்னர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் மழையின் குறுக்கீடு இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கேப்டன் கோலி விளக்கம்
இந்நிலையில் அதற்கு விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மழையின் குறுக்கீடு இந்திய அணிக்கு எந்த வகையிலும் பாதிப்பை தராது. எங்களை பொறுத்தவரை இந்திய அணியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா சேர்க்கப்பட்டது, அவர்களின் திறமைகாக தான். அவர்கள் அணியில் இருப்பது சிறந்த பவுலிங்கிற்கு மட்டுமல்லாமல் லோயர் ஆர்டர் வரை பேட்டிங்கிற்கும் உதவும். எனவே எங்களுக்கு என்ன தேவை என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம்.
கவலை இல்லை
வானிலை மாற்றம் குறித்து நாங்கள் எதுவும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. என்ன மாற்றம் நிகழ்ந்தாலும் அதைப்பற்றி கவலை இல்லை. ஏனென்றால் அணியில் நாங்கள் அனைத்து பகுதிகளிலும் பலமாக உள்ளோம். எனவே வானிலை மாற்றம் குறித்து கவலை கொள்ள தேவையில்லை. நாம் போட்டியை எப்படி அனுகுகிறோம், எதுபோன்ற முடிவுகளை எடுக்கிறோம் என்பதிலேயே உள்ளது எனக்கூறியுள்ளார்.