லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் தென்னாபிரிக்க அணி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 212 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து தென்னாப்பிரிக்கா அணி அபாரமாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அந்த அணி 138 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனை அடுத்து ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியது. ஆனால் யாருமே கணிக்க முடியாத வகையில் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசை சீட்டுக்கட்டு போல் சரிந்தது. இதனால் ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 73 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி தோல்வியின் விளிம்பில் இருந்தது.
இந்த சூழலில் கடைசி கட்டத்தில் களம் இறங்கிய மிட்செல் ஸ்டார்க் அபாரமாக விளையாடி அரை சதம் அடித்தார். அலெக்ஸ் கெரி 43 ரன்கள் எடுக்க இறுதியில் ஜோஸ் ஹெசல்வுட் 17 ரன்கள் எடுத்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 65 ஓவர் முடிவில் 207 ரன்கள் எடுத்திருக்கிறது. கடைசி மூன்று விக்கெட்டுக்கு மட்டும் ஆஸ்திரேலியா அணி 130 ரன்ளை சேர்த்து அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றி இருக்கிறது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 250 ரன்களுக்கு மேல் கடைசி இன்னிங்ஸில் அடிப்பதெல்லாம் சிரமமான காரியம். அதுவும் ஆடுகளம் தற்போது வேக பந்துவீச்சிக்கு சாதகமாக இருக்கிறது. இதனால் தென்ஆப்பிரிக்க அணி 282 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எதிர்நோக்கி விளையாட இருக்கிறது.
ஒருவேளை தென்னாபிரிக்க அணி வீரர்கள் புது பந்தில் விக்கெட் விழாமல் அபாரமாக விளையாடி பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினால் நிச்சயம் சாதிக்க முடியும். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா வீரர்கள் ரபாடா நான்கு விக்கெட், லுங்கி நிகிடி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஆஸ்திரேலியா தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.