உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - இலங்கை பைனலுக்கு வர என்ன செய்ய வேண்டும்.. இந்தியாவின் உதவி தேவை!
மும்பை : நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி முழுமையாக கைப்பற்றி அசத்தியிருக்கிறது. இதன் மூலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து அணியை டெஸ்ட் தொடரில் இலங்கை அணி வீழ்த்தி இருக்கிறது.
இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இலங்கை அணி 55 வெற்றி சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெறுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.

தற்போது இந்திய அணி 71.67 வெற்றி சதவீதத்துடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா அணி 62.5 வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் வெறும் 7 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் இருக்கிறது. இந்த சூழலில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி இலங்கை அணி இரண்டாவது இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் இந்தியாவின் தயவு தேவைப்படும்.
அந்த வகையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணி மூன்றுக்கு பூஜ்ஜியம், மூன்றுக்கு ஒன்று, நான்குக்கு பூஜ்ஜியம், 4க்கு ஒன்று,ஐந்துக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றால் இலங்கை அணி தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெறும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றிலும் தங்களது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றிலும் வெற்றி பெற வேண்டும்.
ஒருவேளை இந்திய அணி ஆஸ்திரேலிய தொடரில் இரண்டுக்கு ஒன்று அல்லது மூன்றுக்கு இரண்டு அல்லது இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் வெற்றி பெற்றால் பின் இலங்கை அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒன்றில் வெற்றி பெற வேண்டும். இதேபோன்று இலங்கை மண்ணில் நடைபெறும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை வெல்ல வேண்டும்.
இலங்கை மண்ணில் ஆஸ்திரேலியாவை நிச்சயம் இலங்கை ஒரு போட்டியிலாவது வென்று விடும் என்ற நம்பிக்கை தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் தென்னாப்பிரிக்க மண்ணில் தென்னாப்பிரிக்காவை ஒரு டெஸ்ட் போட்டியிலாவது வீழ்த்த முடியுமா என்பது தான் தற்போது கேள்வியாக இருக்கிறது. ஆனால் புதிய இலங்கை அதை செய்து காட்டும் என்ற நம்பிக்கை தற்போது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் இருக்கின்றது. இதனால் இந்தியாவின் தயவு கொஞ்சம் தேவைப்படும்.


Click it and Unblock the Notifications