3வது டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தின் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள மோதேரா மைதானத்தில் நாளை துவங்கி நடைபெறவுள்ளது. பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ள இந்த போட்டி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவிற்கு 100வது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது.
கடந்து செல்வது சிறப்பானது
இதனிடையே, கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது 100வது போட்டியில் பங்கேற்க தான் ஆவலுடன் இருந்ததாகவும் ஆனால் காயம் காரணமாக அது நடைபெறவில்லை என்றும் கூறிய இஷாந்த் சர்மா, இத்தகைய விஷயங்களை கடந்து செல்வதுதான் சிறப்பானது என்பதை தான் உணர்ந்துள்ளதாகவும் கூறினார்.
அதிக விக்கெட்டுகள்
கடந்த 2018ல் இருந்து தான் விளையாடியுள்ள 20 டெஸ்ட் போட்டிகளில் 76 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் இஷாந்த் சர்மா. இதில் நான்கு 5 விக்கெட்டுகள் சாதனையும் அடக்கம். இந்நிலையில் இந்தியாவிற்கு வெளியில் தான் அதிக போட்டிகளை விளையாடி அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய லட்சியம்
அடுத்ததாக விளையாடவுள்ள போட்டியில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதே தற்போதைய லட்சியம் என்று கூறியுள்ள இஷாந்த் சர்மா, இது தனக்கு உலக கோப்பை போன்று முக்கியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த இறுதிப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவது உலக கோப்பை இறுதிப்போட்டி அல்லது சாம்பியன் டிராபியை வெற்றி கொள்வது போன்றது என்றும் கூறியுள்ளார்.