கவுஹாத்தி: இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்க அணி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதுவே முதல் முறையாகும். இந்தியா 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் தோற்று இருக்கிறது.

இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி பாதாளத்திற்கு சென்று விட்டது. இன்னும் சொல்லப்போனால் பாகிஸ்தானை விட இந்தியா கீழே சென்று இருக்கிறது. தற்போது ஆஸ்திரேலிய அணி 100 புள்ளி வெற்றி சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ள நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவின் வெற்றி சதவீதம் 75 ஆக முன்னேறி இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
இந்தியாவை பொருத்தவரை அவர்களுடைய வெற்றி சதவீதம் 48.15 என்ற அளவில் குறைந்து தற்போது ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் பாகிஸ்தான் அணி நம்மை விட முன்னிலையில் இருக்கிறது. பாகிஸ்தான் 50 புள்ளி வெற்றி சதவீதத்துடன் நான்காவது இடத்திலும் நமது அண்டை நாட்டுக்காரர்கள் ஆன இலங்கை 66.67 வெற்றி சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இந்தியாவிற்கு கீழ் ஆறாவது இடத்தில் இங்கிலாந்து அணி 36.1 வெற்றி சதவீதத்துடன் உள்ளது. ஏழாவது இடத்தில் வங்கதேச அணி 16.67 வெற்றி சதவீதத்துடன் இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னும் கணக்கை தொடங்கவில்லை. நியூசிலாந்து அணி இன்னும் ஒரு போட்டியில் கூட இந்த சைக்கிளில் விளையாடவில்லை.
தென்னாப்பிரிக்கா வீரர் சைமன் ஹார்மர் இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றி இருக்கிறார். இதனிடையே இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 30ஆம் தேதி ராஞ்சியில் தொடங்குகிறது.