பெர்த்: 2025 - 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. பெர்த்தில் நடந்த முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வெறும் 2வது நாளிலேயே துவம்சம் செய்து, ஆஸ்திரேலியா தனது "நம்பர் 1" இடத்தை இரும்புப் பிடியில் வைத்துள்ளது.
ஆனால், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி காத்திருக்கிறது. புள்ளிப்பட்டியலில் இந்தியா பாகிஸ்தானுக்கு மிக அருகே உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் தோற்றால் பாகிஸ்தானை விட கீழே சரிந்து ஐந்தாவது இடத்தை பிடிக்க நேரிடும்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 205 ரன்கள் இலக்கை வெறும் 28.2 ஓவர்களில் எட்டிப்பிடித்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

குறிப்பாக, தொடக்க வீரராகக் களமிறக்கப்பட்ட ட்ராவிஸ் ஹெட் டெஸ்ட் கிரிக்கெட்டை டி20 போல மாற்றிக் காட்டினார். 83 பந்துகளில் 123 ரன்கள் அடித்தார். இதில் 16 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடக்கம். கடினமான ஆடுகளத்தில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களைச் சிதறடித்து, ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை உலகுக்கு உணர்த்தியுள்ளார்.
தற்போதைய WTC சுழற்சியில் ஆஸ்திரேலியா விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 100% வெற்றி சதவீதத்துடன் (PCT) புள்ளிப்பட்டியலில் தனித்து, கம்பீரமாக முதலிடத்தில் வீற்றிருக்கிறது. அவர்களை நெருங்குவது கூட மற்ற அணிகளுக்குக் கனவாகவே உள்ளது.
மறுபுறம், இந்திய அணியின் நிலைமை கவலைக்கிடமாக மாறி வருகிறது. ஒரு காலத்தில் சொந்த மண்ணில் புலிகளாக வலம் வந்த இந்தியா, இப்போது புள்ளிப்பட்டியலில் தடுமாறிக் கொண்டிருக்கிறது.
தற்போதைய நிலவரப்படி, இந்தியா 4-வது இத்தில் உள்ளது. 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 3 தோல்வி, 1 டிராவுடன் 54.17 வெற்றி சதவீதத்தை வைத்துள்ளது. பாகிஸ்தான் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 2 போட்டிகளில் 1 வெற்றி, 1 தோல்வியுடன் 50.00 வெற்றி சதவீதத்தை வைத்துள்ளது.
இங்குதான் இந்தியாவிற்கு "அபாய மணி" ஒலிக்கிறது. 4-வது இடத்தில் இருக்கும் இந்தியாவிற்கும், 5-வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இடைவெளி மிக மிகக் குறைவு. இந்தியா இன்னும் ஒரு போட்டியில் சறுக்கினால் கூட, புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தானுக்குக் கீழே செல்லும் மோசமான சூழல் ஏற்படலாம்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இரண்டு தோல்விகள், மற்றும் சமீபத்திய டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தோல்வி ஆகியவை இந்தியாவின் சதவீதத்தை வெகுவாகக் குறைத்துள்ளன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்குச் செல்வது இருக்கட்டும், முதலில் முதல் 4 இடங்களுக்குள் தங்களைத் தக்கவைத்துக்கொள்வதே இந்தியாவுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
"பாஸ்பால்" (Bazball) என்று பேசிக்கொண்டிருந்த இங்கிலாந்து அணிக்கு ஆஷஸ் டெஸ்ட் தோல்வி மரண அடியாக மாறி உள்ளது. அந்த அணி 6 போட்டிகளில் 3 தோல்விகளைச் சந்தித்து, 36.11 சதவீதத்துடன் 6-வது இடத்தில் பரிதாபமாகத் தள்ளப்பட்டுள்ளது.