மும்பை : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 241 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி, தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் கிடு கிடுவென உயர்ந்திருக்கிறது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் அபார வெற்றி பெற்று இருக்கிறது. இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் இது எந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று தற்போது பார்க்கலாம்.

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு இங்கிலாந்து அணி கடைசி இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால் இங்கிலாந்து அணி ஒன்பதாவது இடத்திலிருந்து தற்போது ஆறாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. 5 போட்டிகளில் வெற்றி,ஆறு போட்டிகளில் தோல்வி ஒரு போட்டியில் சமன் என 31.25 வெற்றி சதவீதத்துடன் இங்கிலாந்து ஆறாவது இடத்தில் இருக்கின்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு வெற்றி நான்கு தோல்வி என 22.22 உடன் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தை பொறுத்தவரை இந்திய அணி இருக்கிறது. 6 வெற்றி, இரண்டு தோல்வி ஒரு சமன் என 68.51 வெற்றி சதவீதத்துடன் இருக்கின்றது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா 62.50 சதவீதத்துடனும், மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து 50 சதவீதத்துடன் இருக்கின்றது.
இலங்கை அணியும் 50 புள்ளி வெற்றி சதவீதத்துடனும் 4வது இடத்திலும், பாகிஸ்தான் அணி 36.6 வெற்றி சதவீதத்துடன் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறது. ஆறாவது இடத்தில் இங்கிலாந்து உள்ள நிலையில் ஏழாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவும், எட்டாவது இடத்தில் வங்கதேசமும் 25 புள்ளி சதவீதத்துடன் இருக்கிறது.
இந்த நிலையில் அடுத்த ஆறு மாதத்தில் இந்திய அணி 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் சொந்த மண்ணில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும். அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் குறைந்தபட்சம் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலாவது இந்தியா வெற்றி பெற வேண்டும்.