டெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது. ஆனால், இந்தத் முழுமையான வெற்றிக்குப் பிறகும், 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிப் பட்டியலில் இந்திய அணி மூன்றாவது இடத்திலேயே நீடிப்பது, ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி பெற்றும் ஏன் இந்த நிலை? பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் முடிவில் இந்திய அணி நான்காவது இடத்திற்குச் சரியும் அபாயமும் இருப்பதாக கூறப்படுவது ஏன்? என்பது பற்றி பார்க்கலாம்.
பல ரசிகர்களும், ஒரு டெஸ்ட் தொடரை வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முன்னேறி விடலாம் என்று கருதுகின்றனர். ஆனால், WTC தரவரிசை, மொத்த புள்ளிகளை மட்டும் வைத்து அல்ல; ஒரு அணி வென்ற புள்ளிகளின் சதவீதத்தை (Percentage of Points Won - PCT%) வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் வெற்றிக்குப் பிறகு, இந்தியாவின் வெற்றி சதவீதம் 55.56-லிருந்து 61.90 ஆக உயர்ந்துள்ளது. இது ஒரு நல்ல முன்னேற்றம்தான். ஆனால், நமக்கும் மேலே இருக்கும் அணிகளின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்திய அணிக்கு முன்பாக ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

தற்போது மூன்றாவது இடத்தில் இருப்பது கூட தற்காலிகம்தான். இந்த வார இறுதியில், இந்திய அணி நான்காவது இடத்திற்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளது. லாகூரில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், ஏதேனும் ஒரு அணி வெற்றி பெற்றால், அவர்களின் வெற்றி சதவீதம் இந்தியாவை விட அதிகமாகி, இந்தியாவை நான்காவது இடத்திற்குத் தள்ளிவிடும். இது, இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கனவிற்கு ஒரு தற்காலிக பின்னடைவாக அமையும்.
புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். எனவே, இந்திய அணி முதல் இரண்டு இடங்களுக்குள் வர என்ன செய்ய வேண்டும்?
அதிக வெற்றிகள் தேவை: இனி வரும் ஒவ்வொரு தொடரையும் வெல்வது மிகவும் அவசியம். குறிப்பாக, சொந்த மண்ணில் நடக்கும் போட்டிகளில் 100% வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும்.
தோல்விகளைத் தவிர்ப்பது: வெற்றியைப் போலவே, தோல்விகளைத் தவிர்ப்பதும் முக்கியம். ஒரு போட்டியை டிரா செய்வது கூட, தோல்வியடைவதை விட வெற்றி சதவீத கணக்கீட்டில் சிறந்ததாகும்.
வெளிநாட்டு வெற்றிகள்: இந்திய அணியின் உண்மையான சவால், வெளிநாட்டு மண்ணில்தான் உள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற கடினமான நாடுகளில் தொடர்களை வெல்வது, நமது வெற்றி சதவீதத்தை பன்மடங்கு உயர்த்தும்.
அடுத்து வரவிருக்கும் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர், இந்தியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தில் ஒரு முக்கிய தொடராக அமையும். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற டாப் அணிகளுக்கு எதிராகத் தொடர்களை வென்றால் மட்டுமே, இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் எளிதாக நுழைய முடியும்.