மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில், தோல்வியின் பிடியிலிருந்து தப்பித்து ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க டிராவை பதிவு செய்துள்ளது இந்திய அணி. ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தரின் அபாரமான சதங்கள் இந்த டிராவை சாத்தியமாக்கின. இந்த டிராவின் மூலம் இந்தியாவுக்கு 4 புள்ளிகள் கிடைத்துள்ளன. இந்த டிராவால் 2025 -2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிப் பட்டியலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன? இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்தியாவின் வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன? விரிவாக பார்ப்போம்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய மான்செஸ்டர் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலியாவே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான இந்த டிராவுக்குப் பிறகு, இந்திய அணி 4 போட்டிகளில் 1 வெற்றி, 2 தோல்வி, 1 டிராவுடன் 16 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து அணி ஒரு இடம் சரிந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா - 3 போட்டிகள் - 3 வெற்றிகள் - 0 தோல்வி - 0 டிரா - வெற்றி சதவீதம் 100.00%
இலங்கை - 2 போட்டிகள் - 1 வெற்றி - 0 தோல்வி - 1 டிரா - வெற்றி சதவீதம் 66.67%
இங்கிலாந்து - 4 போட்டிகள் - 2 வெற்றிகள் - 1 தோல்வி - 1 டிரா - வெற்றி சதவீதம் 54.17%
இந்தியா - 4 போட்டிகள் - 1 வெற்றி - 2 தோல்விகள் - 1 டிரா - வெற்றி சதவீதம் 33.33%
வங்கதேசம் - 2 போட்டிகள் - 0 வெற்றி - 1 தோல்வி - 1 டிரா - வெற்றி சதவீதம் 16.67%
வெஸ்ட் இண்டீஸ் - 3 போட்டிகள் - 0 வெற்றி - 3 தோல்விகள் - 0 டிரா - வெற்றி சதவீதம் 0.00%
நியூசிலாந்து - 0 போட்டிகள் - 0 வெற்றி - 0 தோல்வி - 0 டிரா - வெற்றி சதவீதம் 0.00%
பாகிஸ்தான் - 0 போட்டிகள் - 0 வெற்றி - 0 தோல்வி - 0 டிரா - வெற்றி சதவீதம் 0.00%
தென்னாப்பிரிக்கா - 0 போட்டிகள் - 0 வெற்றி - 0 தோல்வி - 0 டிரா - வெற்றி சதவீதம் 0.00%
குறிப்பு: வெற்றிக்கு 12 புள்ளிகள், டிராவுக்கு 4 புள்ளிகள், டை ஆனால் 6 புள்ளிகள் வழங்கப்படும். மெதுவாக பந்து வீசியதற்காக இங்கிலாந்துக்கு 2 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் இந்திய அணி 33.33% வெற்றி சதவீதத்துடன் நான்காவது இடத்தில் உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற, முதல் இரண்டு இடங்களுக்குள் வர வேண்டும். அதற்கு இந்திய அணி தனது வெற்றி சதவீதத்தை கணிசமாக உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்திய அணியின் எஞ்சியுள்ள தொடர்கள் எவை? எந்தெந்த வழிகளில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு முன்னேற முடியும்? என பார்க்கலாம்.
இந்த 2025-27 WTC சுழற்சியில் இந்திய அணி மொத்தம் 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இங்கிலாந்து தொடருக்குப் பிறகு இந்திய அணிக்கு உள்நாட்டு டெஸ்ட் தொடர்கள் மற்றும் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்கள் காத்திருக்கின்றன.
உள்நாட்டு தொடர்கள்: வெஸ்ட் இண்டீஸ் (2 டெஸ்ட்), தென்னாப்பிரிக்கா (2 டெஸ்ட்), ஆஸ்திரேலியா (5 டெஸ்ட்).
வெளிநாட்டு தொடர்கள்: இலங்கை (2 டெஸ்ட்), நியூசிலாந்து (2 டெஸ்ட்).
இந்திய அணி 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமெனில், உள்நாட்டில் நடக்கும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுவது மிக அவசியம். குறிப்பாக, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்களை முழுமையாக வெல்ல வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடர் மிகவும் சவாலானதாக இருக்கும். அதிலும் பெரும்பான்மையான வெற்றிகளைப் பதிவு செய்வது இந்தியாவின் வாய்ப்பை பிரகாசமாக்கும்.
இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிப்பதில் வெளிநாட்டு தொடர்களே முக்கியப் பங்கு வகிக்கும். இலங்கை மற்றும் நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டிகளை வெல்வது அவ்வளவு எளிதல்ல. குறிப்பாக, நியூசிலாந்து தொடர் மிகவும் கடினமாக இருக்கும். இந்த வெளிநாட்டு தொடர்களில் குறைந்தது 2-3 வெற்றிகளையாவது பெற்றால் மட்டுமே, முதல் இரண்டு இடங்களுக்கான போட்டியில் நீடிக்க முடியும்.
இந்தியாவின் வெற்றி மட்டும் போதாது. புள்ளிப் பட்டியலில் முதல் இடங்களில் உள்ள ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகள் தங்களது சில போட்டிகளில் தோல்வியடைவதும் இந்தியாவின் வாய்ப்பை அதிகரிக்கும். குறிப்பாக, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களுக்குள் மோதும் ஆஷஸ் தொடரின் முடிவுகள் புள்ளிப் பட்டியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
மொத்தத்தில், மான்செஸ்டர் டிரா இந்திய அணிக்கு தற்காலிக நிம்மதியைக் கொடுத்திருந்தாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பாதை இன்னும் கடினமாகவே உள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி, வரும் தொடர்களில் தொடர்ச்சியான வெற்றிகளைப் பதிவு செய்து, புள்ளிப் பட்டியலில் முன்னேறி, மீண்டும் ஒருமுறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.