மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப் பட்டியலில் தென்னாப்பிரிக்கா அணி 2வது இடத்திற்கு முன்னேறி ஆச்சரியம் கொடுத்துள்ளது. இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலமாக, தென்னாப்பிரிக்கா முன்னேற்றம் கண்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கான ரேஸ் சூடுபிடித்துள்ளது. ஒரு பக்கம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நேருக்கு நேர் போட்டி போட்டு கொண்டுள்ளனர். இன்னொரு பக்கம் அமைதியாக 5வது இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்கா அணி WTC புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 233 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதன் மூலமாக தென்னாப்பிரிக்கா அணி 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்வி மற்றும் ஒரு டிரா என்று 59.26 வெற்றி சதவிகிதத்துடன் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
முதலிடத்தில் இந்திய அணி 15 போட்டிகளில் 9 வெற்றி, 5 தோல்வி மற்றும் ஒரு டிராவுடன் 61.11 வெற்றி சதவிகிதத்துடன் உள்ளது. இதன்பின் ஆஸ்திரேலியா அணி 13 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 4 தோல்வி, ஒரு டிராவுடன் 57.69 வெற்றி சதவிகிதத்துடன் 3வது இடத்தில் இருக்கிறது. இந்த 3 அணிகளுக்கும் இடையில் வெற்றி சதவிகிதத்திற்கான இடைவேளை வெறும் இரண்டாக மட்டுமே உள்ளது.
இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை பொறுத்தவரை 3 அணிகளுக்கு இடையிலான போட்டியாக மாறியுள்ளது. பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நேருக்கு நேர் மோதி இருப்பதால், அந்த டெஸ்ட் தொடரில் வெல்லும் அணியால் எளிதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்று பார்க்கப்படுகிறது.
ஒருவேளை இந்திய அணி 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தினால், வேறு எந்த அணிகளின் உதவியும் இல்லாமல் இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும். அதேபோல் தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்தவரை இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும்.
இந்த 3 போட்டிகளையும் தென்னாப்பிரிக்கா அணி சொந்த மண்ணில் விளையாடுகிறது. இதனால் தென்னாப்பிரிக்கா அணியால் எளிதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா அணியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.