துபாய்: 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தொடருக்கான பரிசுத் தொகையை இரண்டரை மடங்காக உயர்த்தி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தலைவர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். வரும் ஜூன் 11 அன்று 2023-25 சுழற்சிக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. அதில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாட உள்ளன.
இந்த நிலையில், இந்த இறுதிப் போட்டி உட்பட கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடிய அணிகளுக்கு, அந்த அணிகளின் புள்ளிப் பட்டியலில் இருக்கும் இடங்களின் அடிப்படையில் எவ்வளவு பரிசுத் தொகை வழங்கப்படும் என்ற விவரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இறுதிப் போட்டியில் வென்று முதல் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 30.6 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட உள்ளது. இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 18.36 கோடி ரூபாய் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியாவுக்கு 12.24 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்பட உள்ளது. நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்துக்கு 10.2 கோடி ரூபாய், ஐந்தாவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு 8.16 கோடி ரூபாயும் பரிசாக வழங்கப்பட உள்ளது.
ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் உள்ளன. அந்த இரண்டு அணிகளுக்கும் முறையே 7.14 கோடி ரூபாய் மற்றும் 6.12 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட உள்ளது. எட்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 5.1 கோடி ரூபாய் பரிசாகக் கிடைக்க உள்ளது. கடைசி இடத்தில் இருக்கும் பாகிஸ்தானுக்கு 4.08 கோடி ரூபாய் பரிசாகக் கிடைக்க உள்ளது.
வெற்றியாளர் (ஆஸ்திரேலியா/தென்னாப்பிரிக்கா) - $3,600,000 - ₹30,60,00,000 (₹30.6 கோடி)
இரண்டாம் இடம் (ஆஸ்திரேலியா/தென்னாப்பிரிக்கா) - $2,160,000 - ₹18,36,00,000 (₹18.36 கோடி)
மூன்றாம் இடம் (இந்தியா) - $1,440,000 - ₹12,24,00,000 (₹12.24 கோடி)
நான்காம் இடம் (நியூசிலாந்து) - $1,200,000 - ₹10,20,00,000 (₹10.2 கோடி)
ஐந்தாம் இடம் (இங்கிலாந்து) - $960,000 - ₹8,16,00,000 (₹8.16 கோடி)
ஆறாம் இடம் (இலங்கை) - $840,000 - ₹7,14,00,000 (₹7.14 கோடி)
ஏழாம் இடம் (வங்கதேசம்) - $720,000 - ₹6,12,00,000 (₹6.12 கோடி)
எட்டாம் இடம் (வெஸ்ட் இண்டீஸ்) - $600,000 - ₹5,10,00,000 (₹5.10 கோடி)
ஒன்பதாம் இடம் (பாகிஸ்தான்) - $480,000 - ₹4,08,00,000 (₹4.08 கோடி)
2024ஆம் ஆண்டின் இறுதியில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா பொறுப்பேற்றார். அதன் பிறகு நடக்கும் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பரிசுத் தொகையை இரண்டரை மடங்காக உயர்த்தியிருக்கிறார்.
டெஸ்ட் போட்டிகளுக்கான முக்கியத்துவம் குறைந்து வரும் நிலையில், இந்த நடவடிக்கையை அவர் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் இந்த நகர்வைப் பாராட்டி வருகின்றனர்.