லண்டன்: சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்தது இங்கிலாந்து அணி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு (WTC) இரண்டு அடுக்கு (டூ-டையர்) முறையைக் கொண்டு வர சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஆலோசித்து வரும் நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கு காரணமும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவுதான்.
இரண்டு அடுக்கு முறையில் சரியாக ஆடாத அணிகள் இரண்டாம் குழுவுக்கு தள்ளப்படும். உதாரணத்திற்கு, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் நன்றாக ஆடி முதல் நிலையில் இருக்கிறது என்றால் அந்த அணிகள் தங்களுக்குள் டெஸ்ட் தொடர்களில் விளையாடும்.

அதே சமயம், இங்கிலாந்து அணி தரம் குறைக்கப்பட்டு இரண்டாம் குழுவில் இருந்தால் வங்கதேசம், இலங்கை, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் போன்ற பலம் குறைவான அணிகளுடன் அதிக டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டி வரும். இதனால் கிரிக்கெட் வருவாய் வெகுவாக பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.
எங்கே இரட்டை அடுக்கு முறையில் தரம் குறைக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் இங்கிலாந்து இந்தத் திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பதவி உயர்வு மற்றும் தரம் குறைப்பு முறையை இங்கிலாந்து விரும்பவில்லை. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத் தலைவர் ரிச்சர்ட் தாம்சன் இதுகுறித்துப் பேசுகையில், "ஒருவேளை நாங்கள் ஒரு சரிவைச் சந்தித்தால், இரண்டாம் டிவிஷனுக்குத் தள்ளப்பட்டு, ஆஸ்திரேலியா அல்லது இந்தியாவுடன் விளையாட முடியாமல் போவதை நாங்கள் விரும்ப மாட்டோம். அது நடக்கவே கூடாது" என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார்.
இதன் மூலம், கிரிக்கெட்டின் மற்ற இரு பெரும் அணிகளுக்கு எதிரான மதிப்புமிக்க தொடர்களின் வருவாய் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை இழக்க இங்கிலாந்து தயாராக இல்லை என்பது தெளிவாகிறது. குறிப்பாக நூறு ஆண்டுகளுக்கும் மேல் நடந்து வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுடன் விளையாட முடியாமல் போனால் அது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாகும்.
இந்த அச்சம் ஆதாரமற்றது அல்ல. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்-பின் முதல் இரண்டு தொடர்களில் இங்கிலாந்தின் செயல்பாடுகளைப் பார்த்தால், 2019-2021 முதல் சீசனில், இங்கிலாந்து நான்காவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. 2021-2023 இரண்டாவது சீசனிலும் இதே கதைதான், அப்போதும் நான்காவது இடத்தையே பிடித்தது. ஒருவேளை டூ-டையர் முறை அமல்படுத்தப்பட்டால், ஓரிரு தொடர்களில் ஏற்படும் சரிவு கூட அவர்களை இரண்டாம் டிவிஷனுக்குத் தள்ளிவிடும்.
சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக 2-2 என சமனில் முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், இங்கிலாந்தின் தற்போதைய நிலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அவர்களின் ஆக்ரோஷமான "பேஸ்பால்" அணுகுமுறைக்கு சவாலாக அமைந்த இந்தத் தொடர், அதன் உச்சகட்ட வெற்றிகளையும், படுமோசமான சரிவுகளையும் ஒருசேர வெளிப்படுத்தியது.
முதல் டெஸ்டில் 371 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டிப்பிடித்த இங்கிலாந்து, நான்காவது டெஸ்ட் போட்டியில் 669 ரன்களைக் குவித்தது. ஆனால், ஓவல் மைதானத்தில் நடந்த கடைசி டெஸ்டில், வெற்றி பெறும் நிலையில் இருந்து திடீரெனச் சரிந்து, வெறும் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.