
இங்கிலாந்து ஆதிக்கம்
மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 105 பந்துகளை சந்தித்து 19 ரன்களையும், ரஹானே 54 பந்துகளை சந்தித்து 18 ரன்களையும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கில் வெளியேறினார்கள். லோகேஷ் ராகுல் 0, புஜாரா 1, கேப்டன் கோலி 7, பண்ட் 2, ஜடேஜா 4 என்று வெளியேறினார்கள். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், க்ரெய்க் ஓவர்டன் தலா 3 விக்கெட்டுகளையும், ஓலே ராபின்சன், சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பிறகு, களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 432 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் 61 ரன்களும், ஹஸீப் ஹமீத் 68 ரன்களும், டேவிட் மலன் 70 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஜோ ரூட் வழக்கம் போல, சதம் அடித்து 121 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். எனினும், இந்திய அணி 2வது இன்னிங்ஸில் மூன்றாவது நாளில் சிறப்பாக விளையாடிது. லோகேஷ் ராகுல் 8 ரன்களில் வெளியேறினாலும், மற்றொரு தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து சொதப்பி வந்த புஜாரா, 91 ரன்களிலும், இந்த டெஸ்ட் தொடரில் முதல் அரைசதம் அடித்த விராட் கோலி, ஓலே ஆண்டர்சன் ஓவரில் 55 ரன்களிலும் அவுட்டானார்கள். பிறகு ரஹானே 10 ரன்களில் ஆண்டர்சன் ஓவரில் கேட்ச் ஆக, ரிஷப் பண்ட் வெறும் 1 ரன்னில் ராபின்சன் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேற, மொயீன் அலி ஓவரில் முகமது ஷமி 6 ரன்களில் அவுட்டானார். இறுதியில், இந்திய அணி 278 ரன்களில் ஆல் அவுட்டாக, இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்று சமநிலை ஆனது.

மொத்தமாக 124 ரன்கள்
விராட் கோலி அரைசதம் அடித்தாலும், அவர் இந்த டெஸ்ட் தொடரில் இன்னும் ஃபார்முக்கு வரவில்லை என்பதே உண்மை. அவருக்கும் ஃபார்முக்கும் இடையே ஒரு இமயமலையை உள்ளது. பார்ப்பதற்கு எந்நேரமும் அவுட் ஆகும் மனநிலையில் இருப்பது போன்றே இருந்தார். அதற்கு ஒரு சான்று சொல்லவேண்டுமெனில், இந்திய அணியின் 2வது இன்னிங்சில், 86.3வது ஓவரில் விராட் கோலி 46 ரன்கள் எடுத்திருந்த போது, ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓவரில் அவுட் கொடுக்கப்பட்டது. ஆண்டர்சனின் வீசிய பந்து கோலி பேட்டை உரசிச் சென்றது போல தெரிந்ததால் அம்பயர் அவுட் கொடுத்தார். உடனே கோலியும் 2 நடக்க ஆரம்பித்துவிட்டார். பிறகு, என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. திரும்பி ரஹானேவிடம் கேட்ச் கொடுத்தது குறித்து கேட்டார். அதற்கு ரஹானே, கேப்டன் கோலியை ரிவ்யூ எடுக்க அறிவுறுத்தினார். இதையடுத்து, கடைசி நேரத்தில் விராட் கோலி ரிவ்யூ எடுக்க, பந்து பேட்டில் படவில்லை என்பது உறுதியானது. ரிவ்யூவில், கோலியின் பேட் அவரது பேடில் உரசியதால் அந்த சப்தம் கேட்டது தெரிய வந்தது. ரஹானேவின் ஆலோசனை கோலியின் விக்கெட்டை தக்க நேரத்தில் காப்பாற்றியது. அப்போதும் ஆக்ரோஷமாக இருக்கும் கோலி, அம்பயர் அவுட் கொடுத்த உடன், எந்த ரியாக்ஷனும் காட்டாமல் நடக்க தயாராகிவிட்டார். ச்சை.. அவுட்டாகிட்டோமே என்ற ஏமாற்றம் அவரிடம் துளியும் இல்லை. மாறாக, எப்படா.. அவுட்டாவோம் என்று எதிர்பார்த்து காத்திருந்தது போலவே இருந்தது அவருடைய பாடி லேங்குவேஜ். இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாகவே அவர் 124 ரன்கள் தான் அடித்திருக்கிறார். ஆவரேஜ் 24.80.

பேசுபொருள் ஆக்குகிறோம்
இந்த நிலையில், அவர் மீண்டும் ஃபார்முக்கு வர வேண்டும் என்று பல சீனியர் வீரர்கள் டிஸைன் டிஸைனாக ஐடியா கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய முன்னாள் வீரர் டபிள்யூ வி ராமன் கோலிக்கு ஒரு மதிப்புமிக்க அட்வைஸ் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் சோனி நிகழ்ச்சியில் பேசுகையில், "நாம் உண்மையில் அவரை குறை சொல்ல முடியாது. விராட் மீது எப்போதும் அதிக அழுத்தம் உள்ளது. அவர் செய்யும் எல்லாவற்றிலும் நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். அவர் இதைச் செய்தாலும் நாம் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம், பெரிதாக்குகிறோம். வியப்பாக பேசுகிறோம். பேசுபொருள் ஆக்குகிறோம். அவர் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்பது நமக்கு தெரியும், எனவே அவரிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறோம். சச்சின் டெண்டுல்கர் விளையாடும்போது அப்படி ஒரு சூழல் இருந்தது. விராட் கோலியும் இப்போது அப்படியொரு சூழலில் தான் இருக்கிறார். அவர், 95 ரன்கள் அடித்தாலும் கூட, அவர் பேட்டிங்கில் தோல்வியுற்றதாகவே நாம் எண்ணுகிறோம்.

உறுதியாக நம்புகிறேன்
ஒருவேளை நான் விராட் கோலியின் பயிற்சியாளராக இருந்தால், நான் அவரிடம், 'விராட், இது போதும். அணியை முன்னின்று வழி நடத்தியது போதும். இப்போது மற்றவர்களின் பின்னால் இருந்து அவர்களை தள்ள முயற்சி செய்யச் சொல்லுங்கள், அவர்களால் முடிந்ததைச் செய்யச் செய்யுங்கள். எந்த நேரத்திலும் நீங்கள் உங்கள் சிறந்த ஃபார்முக்கு திரும்புவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் உங்களது பழைய ஆட்டத்தை நாங்கள் ஆங்காங்கே பார்த்தோம்' என்று சொல்வேன். அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் நிச்சயமாக சிறப்பாக செயல்படுவார் என்று நான் நம்புகிறேன். நான் அவரிடம், "அணியில் முன்னின்று வழிநடத்துவதை இனி நீங்கள் நீங்கள் நிராகரிக்க வேண்டும். அதை மறக்க வேண்டும். மற்றவர்களைத் முன்னே தள்ளி, பின்னால் இருந்து வழிநடத்துங்கள்" என்று அவரிடம் சொல்வேன் என்று டபிள்யூ வி ராமன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications