மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிவேகமாக பந்து வீசக்கூடிய வீரராக உத்தர பிரதேசத்தை சேர்ந்த யாஷ் தயால் அறியப்பட்டார். ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு சீசனில் குஜராத் அணிக்காக விளையாடிய யாஷ் தயால், தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை மறக்கும் அளவிற்கு ஒரு சம்பவத்தை எதிர்கொண்டார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ரிங்கு சிங், தொடர்ந்து ஐந்து சிக்சர்கள் அடித்து யாஷ் தயாலின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஒரு பேரிடியை கொடுத்தார். எனினும் ஆர் சி பி அணி 5 கோடி ரூபாய் கொடுத்து மினி ஏலத்தில் எடுத்தது.

முதலில் ரசிகர்கள் இவ்வளவு கோடி கொடுத்து எடுத்திருக்கிறீர்களே என்று யாஷ் தயாலை கிண்டல் செய்தனர்.ஆனால் 2024 ஆம் ஆண்டு சீசனில் யாஷ் தயாலை 15 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர் சி பி அணி பிளே ஆப் வரை சென்றதுக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் கிரிக்கெட் வாழ்க்கையை முடிந்து விட்டது என நினைத்த யாஸ் தயாலின் கேரியர் புது உத்வேகத்தை பெற்றது.
இதற்கு காரணம் என்ன என்பது குறித்து அவர் தற்போது பேசியிருக்கிறார். நான் தற்போது கிரிக்கெட்டில் மீண்டும் நன்றாக செயல்படுகிறேன் என்றால் அது விராட் கோலியால் மட்டும் தான். குஜராத் அணியில் இருந்து ஆர்சிபி அணிக்கு வந்த போது நான் உத்வேகம் குன்றி இருந்தேன். அப்போது விராட் கோலி தான் எனக்கு தொடர் முழுவதும் ஆதரவாக நின்றார்.
ஒரு புதிய அணிக்கு வந்திருக்கிறோம் என்ற யோசனையே வராதபடி விராட் கோலி என்னை பார்த்துக்கொண்டார். என்னை அனைத்து சூழலிலும் ஆதரவாக நின்று என்னுடைய நம்பிக்கையை அதிகரித்தார். இளம் வீரர்களிடம் ஆரோக்கியமான முறையில் பேசி என் நம்பிக்கையை அதிகரித்தார்.
விராட் கோலி குறித்து தொலைக்காட்சிகளில் சிலர் சொல்லுவது போல் எல்லாம் அவர் கிடையாது. விராட் கோலி வீரர்களுக்காக எப்போதுமே துணையாக நிற்கக் கூடியவர் என்று யாஷ் தயால் கூறியிருக்கிறார்.