கான்பூர்: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடுபவருமான யாஷ் தயாள் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். தீவிரமான சட்ட சிக்கல்கள் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் அவர் சிக்கியுள்ள நிலையில், தனது காதலியும் கன்டென்ட் கிரியேட்டருமான ஸ்வேதா பண்டிரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பிப்ரவரி 4 ஆம் தேதி நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றுள்ளது. இந்த திருமணம் மிகவும் ரகசியமாக நடந்ததால், எந்தவொரு சக கிரிக்கெட் வீரரும் இதில் கலந்துகொண்டதாக இதுவரை தகவல் இல்லை.

யாஷ் தயாளின் மனைவியான ஸ்வேதா பண்டிர் உத்தரகாண்ட் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது டெல்லியில் வசித்து வரும் இவர், சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். இன்ஸ்டாகிராமில் 5,87,000 க்கும் மேற்பட்ட ஃபாலோயர்களைக் கொண்டுள்ளார். இவருக்கும் கிரிக்கெட்டிற்கும் நீண்ட தொடர்பு உள்ளது; இன்டர்கான்டினென்டல் லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் ஒளிபரப்பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் ஸ்வேதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாஷ் தயாளுடன் இருக்கும் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்திருந்தார்.
யாஷ் தயாள் மீது 2 வெவ்வேறு பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ள நிலையில் இந்த திருமணம் நடந்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. திருமண ஆசை காட்டி சுமார் 5 ஆண்டுகள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக காசியாபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் அவர் மீது புகார் அளித்திருந்தார். அதன் பேரில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

அதேபோல், கிரிக்கெட்டில் உதவுவதாகக் கூறி 2023 ஆம் ஆண்டில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெய்ப்பூரிலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்த வழக்கில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் யாஷ் தயாளுக்கு ஜாமீன் வழங்கி நிவாரணம் அளித்திருந்தது. இந்த தீர்ப்பை ஸ்வேதா தனது சமூக வலைதளங்கள் மூலமாக கொண்டாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை சர்ச்சைகளுக்கும் மத்தியில் தற்போது இருவரும் புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர்.
